தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட் பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி : 30, 31ம் தேதிகளில் நடக்கிறது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட் பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி : 30, 31ம் தேதிகளில் நடக்கிறது

வேலூர் : தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட் கணினிகளை பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குனர் அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18ம் கல்வியாண்டில் உயர் தொடக்க நிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்காக புவியியல், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கான காணொலிகள் உருவாக்கப்பட்டு அவற்றை டேப்லெட் (கையடக்க கணினி) மூலமாக காண்பதற்கென ஒவ்வொரு நடுநிலைப்பள்ளிக்கும் ஒரு டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது. 



இவ்வாறு வழங்கப்பட்டு இருக்கும் டேப்லெட்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ள ஆப் களை பயன்படுத்துவதற்காக மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி, மாவட்ட அளவிலான பயிற்சி 4 மண்டலங்களில் நடந்தது. இதில் 32 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வட்டார வள மையத்திலிருந்து 2 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இதன் தொடர்ச்சியாக வட்டார வளமைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக இரு பிரிவுகளாக வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் 2 நாட்கள் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட வேண்டும். இப்பயிற்சியில் 50 சதவீத நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 30ம் தேதியும், மீதமுள்ள ஆசிரியர்கள் 31ம் தேதியும் பங்கேற்க வேண்டும். வட்டார அளவிலான பயிற்சி எல்சிடி மற்றும் வைபை இணைப்பு இருக்கும் வகையில் அமைத்திட வேண்டியது அவசியம். இந்த பயிற்சியின்போது ஆசிரியர்களிடம் டேப்லெட் வழங்கப்பட்டு பயிற்சி நடத்தப்பட வேண்டும். 



2வது பிரிவில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களிடம் அந்தந்த பள்ளிக்குரிய டேப்லெட்டை உரிய பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டு வழங்க வேண்டும். பின்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளி பார்வையின்போது, பள்ளி இருப்பு பதிவேடு மற்றும் கால் பதிவேட்டில் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். எனவே மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிற்சியினை பெற்ற ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்களை கருத்தாளர்களாக பயன்படுத்தி வட்டார வள மைய பயிற்சிகளை சிறப்பாக நடத்த அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வட்டார வளமையங்களுக்கு டேப்லெட் வழங்கப்பட்டதற்கான பதிவேட்டின் நகல் ஒன்றினை தவறாமல் மாநில திட்ட இயக்குனரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment