வயது முதிர்ந்த பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் வரை சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா தெரிவித்தார்.
சென்னை சர்.பிட்டி தியாகராய அரங்கில் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவைத் தொடங்கி வைத்து அமைச்சர் வி.சரோஜா பேசியது:
முதியோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமூக நலத்துறை சார்பில் மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாதந்தோறும் ரூ. 500 வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித் தொகை தற்போது ரூ. 1,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. உணவூட்டு மானியமும் ரூ. 300-லிருந்து ரூ.1,200- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெற்றோர், முதியோர் நலச் சட்டம் 2007-இன்படி கோட்டாட்சியர்கள் தலைமையில் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பாயங்களில் முதியோர் புகார் அளித்தால், அதன் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும். .
பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கவும், பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.10 ஆயிரம் வரை பிள்ளைகளிடம் இருந்து பெற்று பெற்றோருக்கு வழங்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். .
அதைத் தொடர்ந்து, நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை அமைச்சர் வி.சரோஜா பார்வையிட்டார். இதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ப.சத்யநாராயணன், விருகை வி.என்.ரவி, சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். .

No comments:
Post a Comment
Please Comment