குரூப் 2 வினாத்தாள் தமிழிலும் இருக்கும்- டிஎன்பிஎஸ்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப் 2 வினாத்தாள் தமிழிலும் இருக்கும்- டிஎன்பிஎஸ்சி

குரூப்2 தேர்வுகளுக்கு தமிழிலும் வினாத்தாள் இருக்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.











தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள குரூப் 2 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் குரூப் 2 தேர்வுகளுக்கு தமிழிலும் வினாத்தாள் இருக்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.




இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் அனைத்து தொகுதி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆங்கில மொழியை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட சில பாடங்களுக்கும் மட்டுமே ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள டிஎன்பிஎஸ்சி, பயிற்று மொழி தமிழில் இருந்தால் வினாத்தாள்களும் கண்டிப்பாக தமிழில் தயரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்கள் அப்பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போதே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
11.11.2018 அன்று நடைபெறவுள்ள குரூப் 2 முதனிலைத் தேர்வுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கேள்விகள் இடம்பெறும். முதன்மை எழுத்துத்தேர்வுக்கான வினாத்தாளும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கும்.




குரூப் 2 தேர்வானது 11.11.2018 அன்று திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, தேர்வர்கள் இதுகுறித்து வெளியாகும் ஆதாரமற்ற, தவறான செய்திகள் குறித்து கவலைப்படாமல் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment