அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்வுக்கான கட்டணங்களும் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை எடுத்த முடிவின்படி 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்றும் கடந்த மாதம் தெரிவித்து இருந்தது. இதற்கு கல்வியாளர்கள், பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், மேற்கண்ட வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக அரசுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் நேற்று முன்தினம் வரை கருத்து தெரிவித்து வந்தார். ஆனால், மேற்கண்ட வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது தொடர்பான அனைத்து பூர்வாங்க பணிகளையும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஒருபுறம் செய்துள்ளனர்.
தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்தாவது:
} 2018-19ம் கல்வி ஆண்டுமுதல் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
} 20 மாணவர்களுக்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும். 20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 5ம் வகுப்பு தொடக்கப் பள்ளி மாணவர்கள், அருகில் உள்ள தொடக்கப் பள்ளி அல்லது நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும். அதேபோல, 20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 8ம் வகுப்பு மாணவர்கள் அருகில் உள்ள உயர்நிலை அல்லது மேனிலைப் பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும்.
} தேர்வு நேரம் 2 மணி நேரம் இருக்க வேண்டும். பாடத்திட்டம் என்பது 3ம் பருவத்துக்கான பாடத்திட்டமாக இருக்க வேண்டும். முதல் மற்றும் 2ம் பருவத்துக்கான பாடத்திட்டத்தில் இருந்தும் பொதுவான கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 60.
} தனியார், சுயநிதி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் படிக்கும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் ரூ50, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ100 செலுத்தப்பட வேண்டும்.
} மேற்கண்ட தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள், வட்டார வள மைய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். விடைத்தாள் திருத்துவது சிஆர்சி அளவில் மதிப்பீடு செய்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்க வேண்டும்.
செங்கோட்டையன் விளக்கம்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கோபி அருகே அளித்த பேட்டியில், இது அரசின் கொள்கை முடிவு. அரசு பள்ளி கல்வித்துறை மூலமாக ஆணை பிறப்பித்தால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்.
முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டப்பட்டு, மாணவர்கள் நலன் மற்றும் பெற்றோர் நலனை கருத்தில் கொண்டு கல்வியாளர்களிடம் ஆலோசனை பெற்ற பின்பே முடிவு செய்யப்படும். அதனால் இதுகுறித்து மாணவர்களோ, பெற்றோர்களோ அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார்.

No comments:
Post a Comment
Please Comment