கிராமத்தில் ரூ.12 லட்சத்தில் நூலகம், இ-சேவை மையம் அமைக்க நடவடிக்கை
திருவள்ளூர் அருகே சேவாலயா சார்பில் ஹுண்டாய் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்புடன் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நூலகமும், இ-சேவை மைய வளாகமும் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளன.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது நத்தமேடு கிராமம். 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நூலகமும், கிராம இ-சேவை மையத்தையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த வசதிகளை சேவாலயா அறக்கட்டளை சார்பில் செய்து தர, ஹுண்டாய் வாகனத் தயாரிப்பு நிறுவனம் முன்வந்தது.
இதற்காக அந்த நிறுவனம் ரூ.12 லட்சத்தை ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நூலகம் மற்றும் இ-சேவை மையக் கட்டட வளாகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சேவாலயா அறக்கட்டளை நிர்வாகி முரளிதரன் தலைமை வகித்தார். ஹுண்டாய் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாங் கே ஜங், அந்த நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ஆர்.ராஜேஷ் ஆகியோர் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் சேவாலயா சார்பில் செயல்படும் பாரதியார் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிங்ஸ்டன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், நத்தமேடு கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி, ஊராட்சி செயலர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
Please Comment