விரலில் மை இல்லைன்னா attendance கிடையாது.. மாணவ, மாணவிகளை கலாய்த்த மாவட்ட ஆட்சியர்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விரலில் மை இல்லைன்னா attendance கிடையாது.. மாணவ, மாணவிகளை கலாய்த்த மாவட்ட ஆட்சியர்!

நாகர்கோவில்: பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவை ஏற்படுத்தும் வகையிலும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தினர். 




நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் நகைச்சுவையாக கலந்துரையாடி வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தது மாணவ மாணவிகளை மட்டுமல்லாது அங்கு கூடி நின்ற பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் களைகட்டி உள்ளது. 



தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவை ஏற்படுத்தவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமிய கலைகள், பிரபலமானவர்களின் பேச்சுகள் அடங்கிய ஒலி ஒளி மூலமாகவும் விளம்பர பதாகைகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 




இதனிடையே தேர்தல் ஆணையத்திற்கு உதவியாக நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த முதன் முதலாக வாக்களிக்க இருக்கும் மாணவ மாணவிகள் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவை ஏற்படுத்தும் வகையிலும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். 



அப்போது தேர்தல் முடிந்து கல்லூரிக்கு வரும் போது யார் யார் விரலில் வாக்களித்தமைக்கான அடையாள மை இல்லையோ அவர்களுக்கு வருகை பதிவு கிடையாது என்று நகைச்சுவையாக கூறினார். 



மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தை ஒப்பிடும் போது குமரி மாவட்டத்தில் வாக்குபதிவு குறைவு என்பதை சுட்டிகாட்டிய மாவட்ட ஆட்சியர் படித்தவர்கள் நிறைந்த மாவட்டத்தில் உங்களை போன்ற மாணவ மாணவிகள் நினைத்தால் 100 சதவீத வாக்குபதிவை நிச்சயம் ஏற்படுத்த முடியும் என்றார். இதற்கு பதில் அளித்த மாணவ மாணவிகள் நிச்சயம் நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் 100 சதவீத வாக்குபதிவை உருவாக்கி காட்டுவோம் என நம்பிக்கை தெரிவித்தனர். 




மாணவ மாணவிகளுடன் நகைசுவையாக கலந்துரையாடியும், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கைகொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியரின் செயல் மாணவ மாணவிகளை மட்டுமல்லாது அங்கு கூடி நின்ற பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் ஆட்டோ, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

No comments:

Post a Comment

Please Comment