இபிஎப் கொண்டுவந்த சட்டத்திருத்தம் ரத்து: தொழிலாளர் ஓய்வூதியம் அதிகரிக்க வாய்ப்பு
வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஓய்வூதிய திட்டத்தில் கொண்டுவந்த சட்ட திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் முடிவால்,தனியார் நிறுவன தொழிலாளர்களின் ஓய்வூதியம் பல மடங்கு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வருங்கால வைப்பு நிதி நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய சட்டத்தில் 1.9.2014 முதல் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்களிடமிருந்து இபிஎப் பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்ச வரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இபிஎப் ஓய்வூதியம் தொடர் பாக தொடரப்பட்ட வழக்கில், ரூ.15 ஆயிரம் என்ற வரம்புத்தொகையை அடிப்படையாக கொள்ளாமல் உண்மையில் எவ்வளவு அடிப்படை சம்பளமோ அதை கணக்கீட்டு ஓய்வூதியத்தை நிர்ணயிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை ஏற்றுக்கொண்ட இபிஎப் நிறுவனம், ஓய்வூதிய கணக்கீட்டில் மாற்றம் கொண்டுவந்து புதிய விதிமுறையை கொண்டுவந்தது.
முன்பு ஊழியர்களின் கடைசி 10 மாத சம்பளத்தின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்பட்டு வந்த நிலையில், புதிய விதிமுறையில், கடைசி 60 மாத சம்பளத்தின் சராசரி அடிப்படையில் ஓய்வூதிய கணக்கீட்டுக்கான சம்பளம் முடிவுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இபிஎப் நிறுவனம் புதிதாக கொண்டுவந்த சட்டத் திருத்தம் செல்லாதுஎன தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து,வருங்கால வைப்பு நிதி அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தினால் ஊழியர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
31.8.2014-க்கு முன்பு ஓய்வூதிய பலனுக்கு 12 மாத சம்பளத் தொகைதான் சராசரி தொகையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வந்தது. 1.9.2014-க்குப் பிறகு இது60 மாத சம்பளத்தில் இருந்து கணக்கில் எடுக்க வேண்டும். அத்துடன் 'புரோ ரேட்டா' அடைப்படையில் கணக்கிட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. உதாரணமாக, 31.8.2014-க்கு முன்பாக, ஊழியர் ஒருவர் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் அவருக்கு 36 மாதத்துக்கு ரூ.6,500 அடிப்படையாகக் கொண்டு சராசரி ஊதியம் கணக்கிடப்படும். மீதமுள்ள 24 மாதத்துக்கு ரூ.15 ஆயிரம்அடிப்படையில் சராசரி ஊதியம் கணக்கிடப்படும்.
இதன் மூலம், ஊழியருக்கு ஓய்வூதிய தொகை குறையும்.
முன்பு ரூ.6,500-க்கும் அதிகமாக ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்த அனுமதி பெற்றுள்ள ஊழியர் ஒருவர், இந்தத் திருத்தம் கொண்டு வந்த பிறகும் பணியில் நீடித்து, ஓய்வூதிய தொகையைமேலும் அதிகமாக கட்ட விரும்பினால் அதற்கான விருப்பத்தைத் தெரிவித்து அதற்குண்டான கூடுதல் தொகையை தொடர்ந்து கட்டலாம். அவ்வாறு கட்டும் போது, மத்திய அரசு கட்ட வேண்டிய பங்களிப்பான 1.16 சதவீத தொகையைஊழியரே செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இந்த விருப்பத்தை 12 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் ரூ.6,500 மட்டுமே ஓய்வூதியத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். கூடுதலாக செலுத்தப்பட்ட தொகைஅனைத்தும் இபிஎப் நிதிக்குச்சென்று விடும் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்பில், ஊழியர்கள் யாராவது ரூ.6,500-க்கு மேல் ஊதியம் பெற்றிருந்தால், அதாவது அவர் ஓய்வூதியத் தொகை கட்டியிருந்து அவர் ஓய்வூதிய விருப்பத்தை தேர்வு செய்யவில்லை என்றாலும், அவருக்கு ஓய்வூதிய பலனை வழங்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்தப் புதிய திருத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம், ஊழியர் ஒருவர் எவ்வளவு அதிக தொகையை வேண்டுமானாலும் இபிஎப் திட்டத்தில் கட்டலாம். அதேபோல், அரசின் பங்களிப்பு தொகையான 1.16 சதவீத தொகையை ஊழியர்களே செலுத்த வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை 31.8.2014-க்கு முன்பாக, இபிஎப் பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்ச வரம்பு தொகையான ரூ.6,500-க்கு மட்டும்தான் பணம் கட்ட முடியும்.
ஆனால், தற்போது, அதுபோன்று உச்சவரம்பு இல்லாமல் ஊழியர் தனது அடிப்படை ஊதியம் எவ்வளவு இருந்தாலும் அத்தொகைக்கு முழுமையாக இபிஎப் தொகையைக் கட்டலாம்.
அதாவது, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம் இருந்தால் அதற்கு 12 சதவீதம் செலுத்த வேண்டும்.
நிறுவனமும் தனது பங்களிப்பாக அதே தொகையை இபிஎப் நிதியில் செலுத்தும். அதில், 8.33 சதவீதம் தொகை ஓய்வூதிய திட்டத்துக்குப் போகும். எஞ்சிய 3.67 தொகை இபிஎப் நிதியில் சேரும். 1.9.2014-க்குப் பிறகு செய்யப்பட்ட புதிய திருத்தத்தில் இந்த விதி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.
இந்தப் புதிய திருத்தத்தை கேரள நீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் மூலம், ஊழியர்கள் ஓய்வூதிய திட்டத்தில் சேரும் நிதி கணிசமாக அதிகரிக்கும். இதன்மூலம், அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதிய தொகையும் அதிகமாக கிடைக்கும்.
இவ்வாறு அதிகாரி கூறினார்.
இபிஎப் தொகையை யார் கட்டுவது?
நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, டெல்லியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்றும், நாளையும் சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இதில், புதிய திருத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஊழியர்கள் தங்களது அடிப்படை ஊதியத்துக்கு முழுமையாக இபிஎப் தொகையை ஊழியர்களே தாமாக முன்வந்து கட்டலாமா அல்லது நிறுவனங்கள் அதை வசூல் செய்து கட்டுமா அல்லது வருங்கால வைப்பு நிதி அலுவலகம் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

No comments:
Post a Comment
Please Comment