ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை
சென்னையைச் சேர்ந்த, 14 வயது சிறுமி, ஆங்கிலத்தில் நாவல் எழுதி சாதனை படைத்துள்ளார். சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர், ஜெயசேகர்; அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி கோமதி; கால்நடை மருத்துவர். இவர்களின் மகள், தீபிகா; நொளம்பூரில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவர், எல்.கே.ஜி., முதல், மூன்றாம் வகுப்பு வரை, அமெரிக்காவிலும்;
பின், ஆறாம் வகுப்பு வரை சென்னையிலும், பின், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பை, அமெரிக்காவிலும் படித்து உள்ளார். சிறு வயதில் இருந்தே கதை புத்தகங்கள், ஓவியம் என, தீபிகா ஆர்வமாக இருந்தார். அவரது ஆர்வத்தை பார்த்த பெற்றோர், அவருக்கு ஒத்துழைப்பு அளித்து உற்சாகமூட்டினர்.தொடர்ந்து தினமும், தன் கற்பனைகளால் எழுதிய கதைகளை தொகுத்து, 'சொர்க்க தீவுக்கு ஒரு பயணம்' என்ற தலைப்பில், புத்தகமாக உருவாக்கி உள்ளார்.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், நேற்று நடந்தது. சிறுமி படிக்கும் பள்ளியின் முதல்வர், வினிதா சுப்ரமணியம், புத்தகத்தை வெளியிட, சிறுமியின் தாத்தாக்கள் அருணாச்சலம், எஸ்.டி.கே.மணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மொத்தம், 193 பக்கங்கள் உள்ள இந்த புத்தகம், 195 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. கடல் வளம் மீது அதிக ஆர்வமுள்ள சிறுமி தீபிகா, புத்தகத்தில் கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாக, அவரது தந்தை, ஜெயசேகர் தெரிவித்தார். புத்தகத்தின் அட்டைப் படம், அதற்கான விளம்பர வீடியோ ஆகியவற்றையும், சிறுமி வினிதாவே தயார் செய்துள்ளார்.

No comments:
Post a Comment
Please Comment