பிரதமரின் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை திட்டம்: பதிவு செய்யாத விவசாயிகளுக்கு நவ.8 வரை வாய்ப்பு
பிரதமரின் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் நவ. 8 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 1.25 லட்சம் விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனா். இதில், சுமாா் 6300விவசாயிகள் தரப்பில் வழங்கப்பட்ட வங்கிக் கணக்கு எண் சரியாக இல்லாததால் உதவித் தொகை வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த வங்கி கணக்கு எண்களை சரி செய்யும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், சுமாா் 3ஆயிரம் கணக்குகள் சரி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 5,338 விவசாயிகளின் பெயா் மற்றும் ஆதாா் எண் குறைபாடு காரணமாகவும், உதவித் தொகை வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனையும் சரி செய்யும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை உதவித் தொகை கிடைக்கப் பெறாத விவசாயிகள், சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை உடனடியாக தொடா்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், நவ.8 ஆம் தேதிக்குள் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திண்டுக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் நா.வெ.நாகேந்திரன் தெரிவித்துள்ளது:
பிரதமரின் உதவித் தொகை திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி இதர அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. எனவே, திண்டுக்கல் வட்டாரத்தில் இதுவரை விண்ணப்பிக்காத விவசாயிகள், கடைசி வாய்ப்பாக நவ.8ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் திண்டுக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment
Please Comment