உலகம் முழுவதும் 154 கோடி மாணவர்கள் பாதிப்பு: யுனெஸ்கோ - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உலகம் முழுவதும் 154 கோடி மாணவர்கள் பாதிப்பு: யுனெஸ்கோ

உலகம் முழுவதும் 154 கோடி மாணவர்கள் பாதிப்பு: யுனெஸ்கோ 

 பாரீஸ்: கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் உலக அளவில் 154 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது கல்வியில் பாலின இடைவெளிகளை மேலும் அதிகரிக்கும் என்று ஐ.நா கல்வி நிறுவனமான 'யுனெஸ்கோ' தெரிவித்துள்ளது. 

 ஐ.நா கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) கல்விக்கான உதவி தலைமை இயக்குநர் ஸ்டெபானியா கியானினி, செய்தியாளர்களுக்கு அளித்த ஒரு பேட்டியில், கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, உலகின் பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களில் 89 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு செல்ல முடியாமல் உள்ளனர். 

இது பள்ளி அல்லது பல்கலைக்கழத்தில் பதிவு செய்யப்பட்ட 154 கோடி மாணவர்களை பிரிதிநிதித்துவப்படுத்துவதாகவும், இதில் கிட்டத்தட்ட 74 கோடி பேர் பெண்கள் என்றும், இவர்களில் 11 கோடிக்கும் மேற்பட்டோர் குறைவான வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாழ்ந்து வருவர்கள் என்றும், அங்கு ஏற்கெனவே கல்வி அறிவு பெறுவது ஒரு போராட்டமாக உள்ளது. 

 இந்த மாணவிகளில் கணிசமானோர் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பள்ளிகள் மூடப்படுவது மிகவும் பேரழிவைத் தரும், ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் எத்தனை பேர் மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

வசதியான குடும்பத்து பெண்கள் மட்டும் தொடர்ந்து கல்வி கற்க வாய்ப்பு உள்ளது. இது இளம் பருவப் பெண்களை அளவுக்கு அதிகமாக பாதிக்கும். மேலும் கல்வியில் பாலின இடைவெளிகள் மற்றும் பாலியல் சம்பவங்களை அதிகரிக்கும். சிறுவயது கட்டாய திருமணம், கர்ப்பம் ஆகியவற்றை அதிகரிக்கும். எனவே, பருவ வயது பெண்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். "குறிப்பாக சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்ட நாடுகளில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு, தங்கள் குடும்பங்களில் உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கள் மகள்களுக்கு கல்வி கற்பதற்கான நிதி மற்றும் செலவுகளை கருத்தில் கொள்வதால் அவர்களுக்கான கல்வியில் விளைவுகளை ஏற்படுத்தும். பள்ளி வாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் பல பெண்கள் தங்கள் கல்வியைத் தொடருவார்கள், மற்றவர்கள் ஒருபோதும் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள், "என்று அவர் கூறினார். 

 அவசரகால நடவடிக்கைகளால் பின்தங்கிய குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை நீடித்தால் கல்வி உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். மேலும் சில நாடுகள் காலவரையின்றி பள்ளிகளை மூடுவதற்கு தயாராகி வருவதால், கடந்த கால பிரச்னைகளில் பெற்ற பாடங்களில் இருந்து, பெண் கல்வியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னணு முறையில் பாடங்களை கற்பிக்கலாம் என்றும், கடந்த கால நெருக்கடிகளிலிருந்து படிப்பினைகளை ஆராயுமாறு யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது. 

 "உடல்நலம் மற்றும் பிற நெருக்கடிகளின் விளைவாக தற்காலிகமாக பள்ளிகள் மூடப்படுவது புதியவை அல்ல என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, உலக அளவிலான தற்போதைய கல்வி சீர்குலைவு என்பது ஈடு இணையற்றது, இது நீடித்தால் கல்வி உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று அவர் கூறினார். 

 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment