தினம் ஒரு தகவல் வீடு வாங்கும்போது கவனம் தேவை
அபார்ட்மெண்ட் வாங்கும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீடு வாங்க தயாராகும்போது பல கட்டுமான நிறுவனங்கள் கண்ணில் படும். இதில் இருந்து ஒரு சரியான கட்டுமான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து நமக்கான வீட்டை வாங்கியாக வேண்டும்.
இந்த விஷயத்தில் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சில நேரம் பொய்யான வாக்குறுதிகளை நம்பிவிடுகிறோம். போலி ஆவணங்கள் உதவியுடன் பிரச்சினைக்குரிய இடங்களை உங்களிடம் விற்றுவிடலாம்.
வில்லங்கமான இடங்களில் வீட்டை கட்டிவிட்டு அதை உங்கள் தலையில் கட்டிவிடவும் முயற்சி நடக்கலாம். சுதாரிப்பாக இல்லை என்றால் நமது பணம் அவ்வளவுதான்.
வீட்டை வாங்கிய பின்னர் ஆவணங்கள் பொய்யானவை என்று தெரியும்போது வீட்டை கட்டி தந்தவர் காணாமல் போய்விடுவார். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தகுந்த சட்ட உதவி பெற்று ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
சில நேரம் குறிப்பிட்ட காலத்தில் முடித்து தந்துவிடுவோம் என்று தேதி குறிப்பிட்டு ஒப்பந்தம் போட்ட நிலையிலும் சொன்னபடி வீட்டை முடித்துத் தராமல் இழுத்தடிப்பார்கள்.
அதே போல் வீட்டின் வரைபடத்தில் இருக்கும் வசதிகளில் சிலவற்றைச் செய்யாமலே விட்டுவிடுவார்கள். உதாரணமாக சமையலறையில் பொருட்களை வைக்க தேவையான அலமாரிகளை செய்துதருவதாக உறுதி அளித்திருப்பார்கள்.
ஆனால் வீடு முடிவடைந்த பின்னர் இந்த வேலை முடிக்கப்படாமல் இருக்கும். கேட்டால் கண்டிப்பாக முடித்துத் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் வேலை நடக்கவே நடக்காது.
மேலும் நல்ல தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு போன்றவற்றுக்கான அனுமதி பெறும் விஷயமும் கவனத்தில்கொள்ள வேண்டியவை.
இவற்றை எல்லாம் நன்கு செய்து தரும் நிறுவனமாக பார்த்து, வீடு அமைய உள்ள இடத்தையும் நேரிடையாகச் சென்று பார்த்து, நமக்கு முழு திருப்தி ஏற்பட்ட பின்னரே வீடு தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வது நல்லது.
வீடு முக்கியம் தான், ஆனால் அதைவிட முக்கியம் குடியேறும்போது அது குடைச்சல் தராமல் இருக்க வேண்டும் என்பதும். எனவே இதையும் நினைவில் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment
Please Comment