திருமண சேமிப்பு தொகையை ஏழைகளின் உணவுக்கு செலவிடும் ஆட்டோ ஓட்டுனர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

திருமண சேமிப்பு தொகையை ஏழைகளின் உணவுக்கு செலவிடும் ஆட்டோ ஓட்டுனர்

திருமண சேமிப்பு தொகையை ஏழைகளின் உணவுக்கு செலவிடும் ஆட்டோ ஓட்டுனர்

ஊரடங்கால் கஷ்டத்தில் வாடும் ஏழைகளின் உணவுக்காக திருமண செலவிற்கு வைத்திருந்த தொகையை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் செலவிட்டு வருகிறார். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நாடு முழுவதும் நேற்று நீட்டிக்கப்பட்டது. 

நாட்டிலேயே மராட்டியத்தில் அதிக அளவு கொரோனா பாதிப்பு மற்றும் பலி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மராட்டியத்தின் புனே நகரில் வசித்து வருபவர் அக்ஷய் கொத்வாலே (வயது 30). வருகிற 25ந்தேதி இவருக்கு திருமணம் செய்ய முடிவானது. ஆனால் ஊரடங்கால் திருமண நிகழ்ச்சியை தள்ளி வைத்துள்ளார். 

 இவரது முடிவுக்கு வருங்கால மனைவியும் ஒப்புதல் அளித்துள்ளார். இவர், ஆட்டோ ஓட்டி அதில் கிடைத்த தொகையில் ரூ.2 லட்சம் வரை, தனது திருமண செலவுகளுக்காக சேமித்து வைத்திருக்கிறார். ஆனால், ஒரு வேளை உணவுக்கே வழியில்லாத புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை கண்டதில் இருந்து மனம் வாடியுள்ளார். தனது நண்பர்களுடன் இணைந்து நாள் ஒன்றுக்கு 400 பேருக்கு உணவு அளித்து வருகிறார். 

இதுபற்றி அவர் கூறும்பொழுது, 

வேலை, வருவாய் எதுவும் இல்லாமல் உணவுக்காக போராடும் ஏழை மக்கள், கூலி தொழிலாளர்கள், குறிப்பிடும்படியாக, புலம்பெயர் தொழிலாளர்கள் சாலைகளில் வசித்து வருவது அதிக வலியை தந்தது. அதனால் நான் மற்றும் எனது நண்பர்கள் சிலர் அவர்களுக்கு உதவுவது என முடிவு செய்தோம். இதற்கு எனது திருமண சேமிப்பு தொகையை செலவிட முடிவு செய்தேன். 

நண்பர்களும் உதவிக்கு முன்வந்தனர். கிச்சன் தயார் செய்து, சப்பாத்தி மற்றும் சப்ஜி ஆகியவற்றை தேவையானவர்களுக்கு வழங்கினோம். இதற்கான பணம் கரைந்துள்ள நிலையில், புலாவ், சாம்பர் சாதம் வழங்குவது என முடிவெடுத்துள்ளோம். ஆனால் தொடர்ந்து இந்த பணியை செய்து வருகிறோம். குறைந்தது வரும் 31ந்தேதி வரையாவது உணவு வழங்குவது என்ற இலக்குடன் செயல்படுகிறோம். 

இந்த நெருக்கடி காலங்களில் பிறருக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என கூறினார். கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தனது ஆட்டோவில் ஒலிபெருக்கி ஒன்றையும் வைத்திருக்கிறார். ஊரடங்கில், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு செல்ல இலவச சவாரிகளையும் அவர் செய்து வருகிறார். 

கடந்த வருடம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதேபோன்று உணவு மற்றும் பிற நிவாரண உதவிகளை நண்பர்களுடன் சேர்ந்து அக்ஷய் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment