வீட்டில் இருந்து பணியாற்றுவதில் வசதி; புது முடிவுக்கு வரும் ஐ.டி., நிறுவனங்கள்
ஊரடங்கு காரணமாக, ஒன்றரை மாதங்களாக, ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதால், ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செலவு, கணிசமாக குறைந்துள்ளது. பணித்திறனும் சிறப்பாக உள்ளதால், கட்டடங்கள் பயன்பாட்டை குறைக்க, இந்த நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
நீர் நிலைகள் சுத்தம்நாடு முழுதும், ஒன்றரை மாதமாக ஊரடங்கு தொடர்வதால், வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. அத்துடன், தொழிற்சாலைகளும் இயங்காமையால், காற்று மாசு குறைந்து, நீர் நிலைகளும் சுத்தமாகி வருகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும், ஐ.டி., நிறுவனங்கள், 'ஒர்க் பிரம் ஹோம்' என, ஊழியர்களை, வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதித்து உள்ளன.
கடந்த, 40 நாட்களுக்கு மேலாக, வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணிபுரிவதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செலவு, பெருமளவு குறைந்துள்ளது. அதே நேரத்தில், ஊழியர்களின் பணித்திறனும் அதிகரித்துள்ளது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள், ஊழியர்களை தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்ற வைப்பதில், ஆர்வம் காட்டுகின்றன.
செலவு குறையும்:
அப்படி செய்வதால், கட்டட வாடகை செலவு, மின் கட்டணம், ஊழியர்களுக்கான போக்குவரத்து செலவு, மதிய, இரவு உணவுக்கான கேன்டீன் செலவு போன்றவை, பெருமளவு குறையும் என, நம்புகின்றன. அதுமட்டுமின்றி, ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு, வார விடுமுறையாக சனி, ஞாயிறு அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, வீட்டில் இருந்தே பணிபுரிவதால், அவசர தேவைக்கு, எந்நேரமும் பணி செய்ய உத்தரவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழியர்களுடனான ஆலோசனை கூட்டத்தையும், அவ்வப்போது, 'ஜூம்' என்ற, 'வீடியோ ஆப்' என்ற செயலி வாயிலாக நடத்திக் கொள்கின்றன. அடுத்த கட்டமாக, நிர்வாக பிரிவை தவிர, மற்ற வாடகை கட்டடங்களை குறைக்க, நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. எனவே, இந்த ஊரடங்கு, ஐ.டி., துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என, பொருளாதார ஆலோசகர்கள் கருதுகின்றனர்.

No comments:
Post a Comment
Please Comment