இனி UPI பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டியுடன் கூடிய சேவை வரி?
ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கும், அனுப்புவதற்கும் சுலபமான வழியாக UPI இருந்து வந்தது. இதன் மூலம், வங்கிகளுக்கு செல்வது குறைக்கப்பட்டு இருந்த இடத்தில் இருந்தே நொடிப் பொழுதில் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு விடலாம்.
இதற்காக, கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் என பல்வேறு ஆன்லைன் வாலட்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தற்போது இந்த வசதியையே பெரும்பாலான மக்கள் உபயோகித்து வருகின்றனர். இந்தியாவில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், ஆன்லைன் பரிவர்த்தனைகளே அதிகரித்துள்ளன. சிறு, குறு வியாபாரிகளும் இந்த UPI வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுவரையில், சேவை வரி ஏதுமில்லாமல் இருந்த நிலையில், தற்போது இந்த பரிவர்த்தனை வசதிக்கும் சேவை வரியை வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி, தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிக்கை விடுத்துள்ளது.
அதில், 20 முறைக்கு மேல், UPI பயன்படுத்தி பணம் அனுப்பினால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டியுடன் கூடிய சேவை வரி வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
1 முதல் 1000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டியுடன் ரூ.2.5ம், 1000 ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டியுடன் ரூ.5ம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சேவை வரி பணம் அனுப்புவதற்கு மட்டுமே பொருந்தும் என்றும். ஆன்லைன் மூலம் பில் கட்டுவதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை KMB, HDFC போன்ற தனியார் நிறுவனங்களும் அமல்படுத்தியுள்ளன. விரைவில், அனைத்து வங்கிகளும் இந்த முறையை செயல்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment