கொரோனாவால் வேலைநாட்கள் குறைந்துள்ளது பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து முடிவு
செய்யப்படவில்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
கொரோனாவால் பள்ளிக்கூட
வேலைநாட்கள் குறைந்துள்ளதாகவும், திறக்கப்படுவது குறித்து இன்னும் முடிவு
செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
முடிவு
எடுக்கப்படவில்லை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், நம்பியூரில் தமிழக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கொரோனாவால் பள்ளிக்கூடங்களின் வேலை நாட்கள் 210
நாட்களிலிருந்து குறைந்துள்ளது. எனவே, எவ்வாறு பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கலாம்
என்பது குறித்து அதிகாரிகள், கல்வியாளர்கள் உள்பட 18 பேர் கொண்ட குழு முடிவு
செய்து, அதற்கான அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும். பள்ளிகளை திறப்பது குறித்து
எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைப்பது குறித்த
வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்து உள்ளது. 10-ம் வகுப்பு
பொதுத்தேர்வை பொறுத்தவரையில் 3 துறைகள் இணைந்து பணியாற்ற உள்ளனர். அதில்
பள்ளிக்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வு துறை, வருவாய் பேரிடர் மீட்பு துறை ஆகியன
இணைந்து பணிகளை மேற்கொள்ள உள்ளது. தமிழக முதல்-அமைச்சருடன் மேற்கொள்ளபட்ட
கலந்தாய்வில் வருகிற 11-ந்தேதி அரசு பள்ளி விடுதிகள், தனியார் பள்ளி விடுதிகள்
இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிருமி நாசினி தெளிப்பு
தேர்வு மையங்களை
பொறுத்தவரை மாணவர்கள் பயிலும் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுத நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் 12,816 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது, இதுவே முதல் முறை ஆகும்.
தேர்வு தொடங்கும் அன்று
மாணவர்களுக்கு வினியோகம் செய்வதற்காக 43 லட்சம் முகக்கவசங்கள் தயாராக உள்ளது.
அதேபோல் மாணவர்கள் தேர்வு எழுதும் அறைகளில் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பும்,
தேர்வு முடிந்ததற்கு பின்பும் ஒவ்வொரு நாளும் கிருமிநாசினி தெளிக்கப்படும். இதற்காக
தனி மேற்பார்வையாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
முழுபாதுகாப்பு
தமிழக முதல்-அமைச்சர்
உத்தரவின்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இந்த பணிகளை நேரடியாக ஆய்வு செய்ய
உள்ளனர். எங்கள் உயிரைக் காட்டிலும் மாணவர்கள் உயிர் நலனே முக்கியம் என்ற கருத்தின்
அடிப்படையில் நிச்சயமாக தமிழக அரசு முழு பாதுகாப்பு அளிக்கும். 10-ம் வகுப்பு
பொதுத் தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெறும். தேர்வு எழுத
மாணவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களில் சிலர் தங்களுக்கு
ஆன்-லைன் மூலமாக படிப்பதற்கு செல்போன் வசதியில்லை என கூறியுள்ளனர். 10-ம் வகுப்பு
தேர்வை எழுத கல்வி டி.வி சேனல், மத்திய அரசு டி.வி சேனல் மற்றும் தனியார் டி.வி
சேனல்கள் உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வுக்கு தங்களை தயார்
செய்து கொள்ளலாம். மேலும், கியூ-ஆர் கோடு மூலம் எந்த செல்போனிலும் டவுன்லோடு
செய்தும் படிக்ககலாம்.

No comments:
Post a Comment
Please Comment