விபரீதம் விளைவிக்கும் 'வீடியோ கேம்' - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விபரீதம் விளைவிக்கும் 'வீடியோ கேம்'

விபரீதம் விளைவிக்கும் 'வீடியோ கேம்' 

'ஓடி விளையாடு பாப்பா...' என்ற பாரதியின் வரிகளை இன்றைய இளசுகள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. ஓடியாடி தெருவில் விளையாடிய காலம் மாறி, திரையில் விளையாடும் காலம் வந்து விட்டது.தெருவில் விளையாடினால் 'கொரோனா' அரக்கன் வந்துவிடுவான் என்ற பயத்தில் குழந்தைகள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 

காலை எழுந்தது முதல் இரவு துாங்க செல்லும் வரை அலைபேசியில் வீடியோ கேம்களை பதிவிறக்கம் செய்து விளையாடுகின்றனர். மீண்டும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் விளையாட்டு மனநிலையில் இருந்து எவ்வாறு மீள்வரோ என்பது பலரின் சந்தேகமாக உள்ளது.

ஏராளமான கேம்கள் அலைபேசியில் அதிகநேரம் வீடியோ கேம் விளையாடுவோருக்கு உடல், மன ரீதியாகவோ, குடும்ப வாழ்க்கையிலோ ஏதாவது பாதிப்பு வரலாம். வீடியோ கேம் நிறுவனங்களின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. 

குழந்தைகளை தொடர்ந்து விளையாட வைக்க, பல நிறுவனங்கள் தினமும் புதிய புதிய வீடியோ கேம்களை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக பப்ஜி, ஆங்க்ரி பேர்ட், டெம்பிள் ரன், ரம்மி, சில வகை கேங்ஸ்டர் கேம்கள் மட்டுமே குழந்தைகள், இளைஞர்களை பெரிதும் கவர்ந்து இழுக்கின்றன. 

இப்போது ஆன்லைன் கேமில் பணம் சம்பாதிக்கவும், வெவ்வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடவும் முடியும். ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் போது, மீண்டும் மீண்டும் விளையாட துாண்டும் உத்தியை விளையாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. 

விளையாட்டில் சுவாரஸ்யத்துடன் பணம் ஈட்டும் வழியும் இருந்தால் சொல்லவே வேண்டாம்.எத்தனை பிரிவு 5, 10, 12, 15, 18 வயதுக்கு மேல் என பல பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. டவுன்லோடு செய்யும் போது, எத்தனை வயதுக்கு மேல் இருப்பவர்கள் அதனை விளையாடலாம் என குறிப்பிடப்பட்டிருக்கும். 

அதை பெற்றோர்கள் சரியாக கவனிப்பதில்லை. சிறுவர்களால் அதை புரிந்து கொள்ளவும் முடியாது. அடம் பிடித்தே வீடியோ கேம் விளையாடி தீருவார்கள். ஏதோ விளையாடுகிறான் என்று பெற்றோர்கள் அலட்சியமாக இருக்க கூடாது. என்ன விளையாடுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

வன்முறை, பாலியல் தொடர்பான கேம்கள் அவர்களின் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெரும்பாலும் குழந்தைகளை அலைபேசியில் கேம் விளையாட அனுமதிக்க கூடாது. தற்போது வயது வந்தவர்களும் அதிகமாக கேம் விளையாடுகிறார்கள்.நீண்ட நேரம் கேம் விளையாடுவதால் தலைவலியும், கண்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

வீடியோ கேமுக்கு அடிமையாகி விட கூடாது. குழந்தைகள் - வீடியோ கேம்களுக்கு இடையிலான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் பெற்றோரின் பங்கே மிக முக்கியமானது. வீடியோ கேம் எனும் போதையில் இருந்து குழந்தைகளை மீட்டு, கல்வியில், வேலையில் ஆர்வமூட்டுவதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

பெற்றோரே... இன்றே வீடியோ கேம்களுக்கான போராட்டத்தில் களமிறங்குங்கள். இன்றில்லா விட்டால்... இனி எப்போதுமில்லை.மிரட்டும் 'பப்ஜி' 'பப்ஜி கேம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்வசப்படுத்தி வைத்துள்ளது. சிறு சிறு குட்டித்தீவுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தீவில் பலர் களமிறக்கப்படுவர். 

ஒருவரை ஒருவர் வீழ்த்தி கடைசியில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர்தான் வெற்றியாளர். இந்த விளையாட்டை நண்பர்களுடன் இணைந்து விளையாடலாம். இந்த கேமில் உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் நேர்த்தியாக இருப்பதால் பலரும் எளிதில் அடிமையாகின்றனர். 

சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் நீண்ட நேரம் இந்த கேம் விளையாடிய 16 வயது சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.ஆடலாம் 'ரம்மி' பொது இடங்களில் நான்கு பேர் சேர்ந்து 'சீட்டு' விளையாடினால் போலீஸ் பிடிக்கும். ஆன்லைனில் போலீஸெல்லாம் பிடிக்காது. 

ஆன்லைனில் 'ரம்மி' ஆடி அதிகம் சம்பாதிக்கலாம். குழந்தைகளை வீடியோ கேம்கள் குறி வைப்பது போல், இளைஞர்களை குறி வைத்தே ரம்மி, கேசினோ, லாட்டரி விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.வீடியோ கேம்களில் வென்றால் அடுத்த லெவலுக்கு தான் செல்ல முடியும்.

 ரம்மியில் வென்றால் பணம் கிடைக்கும்.அதே சமயம் பல லட்சம் ரூபாய் மோசடியும் நடக்கிறது. ரம்மி விளையாட பெயர், வயது, வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும். விளையாடும் போது ரூ.100 ல் இருந்து ஆயிரக்கணக்கில் பந்தயம் கட்ட வேண்டும். இதில் ஜெயிக்கும் பலரும் மீண்டும் மீண்டும் விளையாடி பணத்தை பறிகொடுப்பதுதான் அரங்கேறி வருகிறது. விளையாடுபவரின் தகவல்களும் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.பெற்றோரே உஷாரா இருங்க... 

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில் அலைபேசி கதிர்கள் மூளையை துாண்டி புற்றுநோய் கட்டிகள் உருவாகிறது என தெரியவந்துள்ளது. குழந்தைகள் அலைபேசியை அதிக நேரம் பயன்படுத்துவதால் உடல் பருமன், சோர்வு, பார்வை குறைபாடு, தலைவலி, இருதய கோளாறுகள், தசைவலி, கதிர் பாதிப்பால் புற்றுநோய் வரும். அதிக கோபம், மனச் சோர்வு, பதற்றம், மூன்று வயதிற்கு முன்பே அலைபேசியை உபயோகித்தால் கவனக்குறைவு உருவாகிறது.

விளையாட்டில் தோல்வி ஏற்படும் போது அதை ஏற்றுக்கொள்ள முடியாததால் மனரீதியான பாதிப்புகள், தற்கொலை எண்ணம், தாழ்வு மனப்பான்மை மேலோங்குகிறது. பழி வாங்குவது போன்ற விளையாட்டுகள் சிறுவர்களின் மனதில் மனிதாபிமானம் இல்லாமல் செய்கிறது.குழந்தைகள் வீடியோ கேம்களில் இருந்து மீள பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேச, புத்தகம் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும். சாப்பிடும் போது 'டிவி', அலைபேசியை தவிர்க்க வேண்டும். குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். 

பெற்றோருடன் வீட்டிற்குள் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வமூட்டலாம். தோட்ட பராமரிப்பு, வீட்டை சுத்தம் செய்தல் போன்ற பிறபணிகளுக்கு குழந்தைகளை திசைதிருப்பலாம். 13 வயதிற்குட்பட்டோருக்கு கல்வி, அறிவியல் தொடர்பான ஆப்களை பதிவிறக்கம் செய்து பார்க்க வைக்கலாம். 

துாங்கும் அறை, உணவு அருந்தும் போது, குடும்பத்தினர் அமர்ந்து பேசுகையில் குழந்தைகள் அலைபேசியை கையில் எடுப்பதை தடுக்க வேண்டும்.14 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்க வேண்டும். கதிர்வீச்சில் இருந்து தப்பிக்க 6 இன்ச் தள்ளி வைக்க வேண்டும். அலைபேசியை தலையணைக்கு அடியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.- ஆர்.பாலகுரு,மனநல மருத்துவர்,திண்டுக்கல்.

No comments:

Post a Comment

Please Comment