Nine rules of leadership - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Nine rules of leadership

9 ரூல்ஸ் ஆஃப் லீடர்ஷிப்!
ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் பல்வேறு வகையான மக்களை ஒன்று திரட்டி ஒரு பணியில் ஈடுபடுத்தி வேலை வாங்க கூடிய திறமை படைத்தவராக இருக்க வேண்டும்.
ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதை எப்படி செய்ய வேண்டும் என அறிவுரை கூறுபவராக இருக்க வேண்டுமே தவிற குறை கூறுபவராக ஓருபோதும் இருக்க கூடாது. பன்முகத்திறன் கொண்டவராகவும், நிலையாகப் பணி செய்யக்கூடியவராகவும், நேர்மையுடையவராகவும், இருப்பது அவசியம்.
ஊழியர்களின் படைப்பாற்றலை பன்மடங்கு பெருக்குபவராகவும், தொண்டர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி நிர்வாகத்தை தரமாகச் செயல்பட வழிவகுப்பவராக இருக்க வேண்டும்.
1. திட்டமிடுதல்:
நீங்கள் எடுக்கும் முடிவு குறித்த நோக்கங்கள் தெள்ளத் தெளிவாக இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு வேலையையும் தெளிவாக வரையறுக்க வேண்டும். காலவிரயம் இன்றி எவ்வாறு குறிப்பிட்ட வேலையை முடிக்க முடியும் என்பதை ஆராய வேண்டும்.
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்"
என்ற குறளின் கூற்றுக்கு ஏற்ப யாரிடம் எந்த வேலையை கொடுத்தல் சிறப்பாக இருக்கும் என ஆராய்ந்து கொடுப்பது புத்திசாலித்தனம்.
2. வடிவமைத்தல்:
ஒரு வேலையோ, நிர்வாகமோ வடிவமைப்பு என்பது இன்றியமையாதது, நிறுவனத்தில் என்னென்ன பணிகள் உள்ளன. அதற்கான பொறுப்புகள் என்ன யார் இந்த பணிக்கு பொறுப்பு வகிப்பவர் என அனைத்தையும் வடிவமைக்கும் திறமை படைத்தவராக இருக்க வேண்டும். புதுப்புது மாற்றுத் தீர்வுகளை உருவாக்கத் தயங்கக்கூடாது. புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
3. நியமித்தல்:
எந்த ஒரு பணியாக இருந்தாலும் குறிப்பிட்ட வேலைக்கான ஆட்களை நியமிப்பது மிக முக்கியமான ஒன்று. அந்தந்த வேலைக்கான ஆட்களை நியமிக்காவிடில் யார் என்ன வேலை செய்வது என்பது குழப்பமாகிவிடும். எனவே ஒவ்வெரு பணிக்கும் தனித்தனியாக ஆட்கள் நியமிப்பது அவசியம். தகுதியான ஆட்களை தேர்வு செய்வது மிக மிக அவசியம்.
4. இயக்குதல்:
இயங்குவது வேறு, இயக்குவது வேறு, இயக்குவது என்பது தமக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை ஒருங்கிணைக்கவும், வேலை தடம்புரளாமல் சீரான வேகத்தில் இருக்குமாறு, ஒருங்கிணைத்து கொண்டு செல்வது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர் இயங்குபவர்களின் வேதனைகளை புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம்.
5. ஒருங்கிணைத்தல்:
பணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் வரலாம், இதை சமரசம் செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விவேகம் மட்டுமல்லாது, பிறரை புரிந்து கொள்ளும் ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும். என்ன பிரச்னைகள் எழுந்தாலும் வெற்றிகரமாக சமாளிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். முடிவுகள் சரிவர நிறைவேற்றப் படுகின்றதா என்பதைப் பின் தொடர்ந்து கவனிப்பது அவசியம்.
6. அறிக்கை தயார் செய்தல்:
நிர்வாகத்தின் பணிகளை அறிக்கை வடிவில் தயார் செய்வது மிக மிக அவசியம். இந்த அறிக்கைகள் வரும் ஆண்டுகளில் நிர்வாகம் எதை நோக்கி பயணிக்க வேண்டும், அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதை திட்டமிட உதவும். தேவையான தகவல்கள் மிகச் சரியாகவும், போதுமானவையாகவும் இருக்க வேண்டும்.
7. வரவு செலவு திட்டமிடல்:
வரவு செலவு திட்டத்தில் தேர்வு பெற்றவராக இருத்தல் வேண்டும். நிர்வாகத்தின் செலவுக்கு ஏற்ற, வரவு இருப்பது மிக, மிக முக்கியம். இதை அறிக்கை வடிவில் தயார் செய்வதும் அவசியம். இது முந்தைய ஆண்டு மற்றும் வரும் ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க உதவும்.
8. கலந்தாலோசித்தல்:
எந்த ஒரு பிரச்னைக்கும் முடிவு காணும் போது,, அதை செயல்படுத்தும் போது, அதற்கு சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். முடிவு நாம்தான் எடுக்க போகிறோம் என்றாலும் கூட அதற்கான சாதக, பாதகங்களை உரியவர்களிடம் கேட்பது அவசியம்.
9. முடிவு எடுக்கும் திறன்:
நாம் எடுக்கும் முடிவுகள் நிர்வாகத்தின் எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டு முறையாக அறிவுப்பூர்வமாக, தெளிவானதாக இருக்க வேண்டும். நாம் எடுக்கும் முடிவு, நமக்கானது அல்லது ஒரு நிறுவனத்திற்கானது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

No comments:

Post a Comment

Please Comment