அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு காணொலி கருத்தரங்கம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வழங்குகிறது
பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் தமிழகத்தின் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் காணொலி கருத்தரங்கம் மூலம் பயிற்சி வழங்குகிறது. இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தேர்வு செய்யப்பட்ட அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஆதிதிராவிடர் நலத்துறை, பிறமலை கள்ளர் நலத்துறை, வனத்துறை, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு காணொலி கருத்தரங்கம் மூலம் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்களும் இப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இக்காணொலி கருத்தரங்கம் டெல்லியில் இருந்து நடத்தப்படுவதால், ஆங்கில மொழியில் கலந்துரையாடலில் ஈடுபடும் மொழித்திறன் கொண்ட ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு ஆசிரியரை தேர்வு செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், பயிற்சி பெற உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையினை அதற்கான அட்டவணையில் உடனடியாக குறிப்பிட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும், காணொலி கருத்தரங்கம் மூலம் பயிற்சி அளிப்பதற்கு தேவையான இடவசதி மற்றும் ஸ்மார்ட் போர்டு வசதி கொண்ட பல்கலைக்கழக, கருத்தரங்க கூடத்தை தேர்வு செய்யுமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள என்ஐசி மையத்தை தொடர்பு கொண்டு, தேர்வு செய்யப்பட உள்ள கருத்தரங்கத்தில் கூடத்தில் காணொலி கருத்தரங்கை நடத்த ஏதுவாக காணொலி கருத்தரங்க இணைப்பு வசதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்தில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடன் அந்த ஆணையம்அனைத்து மாநிலங்களுக்கும் தேர்வு செய்யப்பட்ட ஒரு நாளில் காணொலி கருத்தரங்கம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளும். எனவே, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மேற்கண்ட காணொலி கருத்தரங்கத்தை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment