தேர்வெழுத மாணவர்கள் 10 கி.மீ. செல்வதைத் தவிர்க்க புதிய மையங்கள்: தேர்வுத் துறை உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தேர்வெழுத மாணவர்கள் 10 கி.மீ. செல்வதைத் தவிர்க்க புதிய மையங்கள்: தேர்வுத் துறை உத்தரவு

போக்குவரத்து வசதி குறைவாகவும், 10 கி.மீ.க்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலும், புதிய தேர்வு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.





தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2018-19) பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி ஏற்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், தேர்வுத் துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: 









பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு மையங்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, மாணவர்களின் வசதிக்குத் தகுந்தபடி தேர்வு மையங்களை அமைப்பது அவசியம் எனக் கருதப்படும் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
அதன் பரிந்துரை அறிக்கையை, முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று அனுப்பி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்தபின், அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்கி பரிந்துரைப்பது அவசியம். 




அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளை, தேர்வு மையமாக அமைக்கப் பரிந்துரை செய்யும் கல்வி அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்படும். மேலும், 10 கி.மீக்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 






தேர்வு மையங்களை ரத்து செய்தால்... தற்போதுள்ள தேர்வு மையங்களில், ரத்து செய்ய வேண்டிய மையங்கள் ஏதேனும் இருந்தால், அதற்கான காரணங்களுடன் அறிக்கை அளிக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல், நீதிமன்ற ஆணையின் மூலம் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்திவரும் பள்ளிகளின் பட்டியலையும் அனுப்ப வேண்டும்.
அதேசமயம், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கக்கூடாது. 






நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் அனைத்தும், மார்ச் மாதமே நடைபெறவுள்ளதால், அதற்கான முகப்புத் தாள்களை முன்கூட்டியே அச்சிட வேண்டிய சூழல் உள்ளது. 
எனவே, புதிய தேர்வு மையங்கள் தொடர்பான அறிக்கையை கல்வி அதிகாரிகள் வரும் 17-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment