நெட், செட் தேர்வுகளுக்காக அக்.14 இல் இலவச பயிற்சி முகாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நெட், செட் தேர்வுகளுக்காக அக்.14 இல் இலவச பயிற்சி முகாம்


பாளையங்கோட்டையில் நெட், செட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் இம் மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.


இதுதொடர்பாக பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முதல்வர் மு.முகம்மது சாதிக் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: கல்லூரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வை என்.டி.ஏ.(N​A​T​I​O​N​AL TE​S​T​I​NG AG​E​N​C​Y) அமைப்பு வரும் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடத்த உள்ளது. 


நிகழாண்டில் ஆன்-லைன் முறையில் எழுதும் இத் தேர்வுக்கு திருநெல்வேலியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இரு பிரிவுகளாக தேர்வு நடத்தப்படும். 


ஆய்வு மாணவர்கள், அரசுதவி பெறாப் பாடப் பிரிவுகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், முதுநிலை இரண்டாமாண்டு மாணவர்கள் உள்ளிட்டோர் இத் தேர்வுகளில் பங்கேற்கலாம். செட், நெட் தேர்வுகள், ஜெ.ஆர்.எப். எனப்படும் முனைவர் பட்ட ஆய்வுக்கான உதவித்தொகை தரும் தேர்வுகள் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு தென்மாவட்ட மாணவர்-மாணவிகளிடம் மிகவும் குறைவாக உள்ளது. அதனை போக்கும்விதமாகவும், விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் நெட் மற்றும் செட் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்ற தலைப்பில் இலவச பயிற்சி முகாம் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இம் மாதம் 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். 


தொடர்ந்து சலுகைக் கட்டணத்தில் டிசம்பர் மாதம் வரை பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.


பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சிக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. 


இரண்டாவது முறையாக தகுதி நீட்டிப்பு பெற்று வரும் 2023 ஆம் ஆண்டுவரை தன்னாட்சி கல்லூரியாக செயல்பட பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி வழங்கியிருக்கிறது என்றார்.


பேட்டியின்போது கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ச.மகாதேவன், வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் சாகுல்ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Please Comment