பள்ளிக்கு வரும் மாணவர்களின் உருவம் அரசுப் பள்ளிகளில் பொருத்தப்படும் நவீன கருவி மூலம் அவர்கள் அளித்துள்ள செல்போனுக்கு தகவல் சென்றுவிடும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் பங்கேற்று தற்காலிக தொடர் அங்கீகாரங்களை மெட்ரிக்பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடுத்த போரூரில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் 40 வகுப்பறைகள் தூய்மை ெசய்யப்பட்டு வெள்ளை அடித்து சீர் செய்யப்பட்டுள்ளது. அங்கேயே ஸ்மார்ட் கிளாஸ் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
அந்த பள்ளியில் இன்று புதியதாக மாணவர்கள் வருகையை கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெயர் Radio Frequincy Internal Divice என்று பெயர். இந்த கருவி மேற்கண்ட பள்ளியின் நுழைவாயிலில் பொருத்தப்பட்டு மாணவியர் வருகை கண்காணிக்கப்படுகிறது. மாணவியர் பள்ளியில் நுழைந்த உடனே அவர்கள் உருவத்தை அந்த கருவி பதிவு செய்து அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கு தகவல் அனுப்பிவிடும்.
இதன் மூலம் காலையில் மாணவியர் பள்ளிக்கு வந்துவிட்டார்களா என்றும் மாலையில் பள்ளியை விட்டு செல்லும் போதும் பள்ளியை விட்டு வெளியேறிவிட்டனர் என்ற தகவலும் பெற்றோருக்கு உடனடியாக சென்றுவிடும். இதன் மூலம் மாணவியர் பாதுகாப்பும், வருகைப் பதிவும் செய்யப்படுகிறது. எனவே இனிமேல் மாணவ மாணவியர் உள்ளேன் ஐயா சொல்லத் தேவையில்லை. இன்று போரூரில் மட்டும் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 1000 பள்ளிகளில் இந்த கருவி பொருத்தப்பட உள்ளது என்றார்.


No comments:
Post a Comment
Please Comment