மகளை அங்கன்வாடியில் சேர்த்தது ஏன் ?'' - மனம் திறந்த நெல்லையின் முதல் பெண் ஆட்சியர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மகளை அங்கன்வாடியில் சேர்த்தது ஏன் ?'' - மனம் திறந்த நெல்லையின் முதல் பெண் ஆட்சியர்

பா ரம்பர்யமிக்க நெல்லை மாவட்டத்தின் 215-வது ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளார். நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியரும் இவர்தான்.






 கடந்த 2009-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஷில்பா, தன் மகளை அங்கன்வாடியில் சேர்த்து அரசு ஊழியர்களுக்கு உதாரணமாக உள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த ஷில்பா தன் மகள் மூன்று வயது கீதாஞ்சலியை பாளையங்கோட்டையில் உள்ள அங்கன்வாடியில் சேர்த்துள்ளார். இங்கு, 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியரின் பங்களா அருகே இந்த அங்கன்வாடி இருப்பதால் ஆட்சியரின் மகள் கீதாவும் நாள் தவறாமல் வந்து சகக் குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கிறார். 






 மகளை அங்கன்வாடியில் சேர்த்தது குறித்து ஆட்சியர் ஷில்பா கூறுகையில், `` நமது அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து தரப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் 1000 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அனைத்து அங்கன்வாடியிலும் திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களிலிருந்து அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. குழந்தைகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மற்ற குழந்தைகளுடன் பழகும் பருவம் இது. 






 ஒவ்வொரு அங்கன்வாடியிலும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உயரம், எடை உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க தனியாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செயலி குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்கள் பதிந்து வைக்கப்படுகின்றன. குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பெற்றோரிடமும் தகவல் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.





 இப்படிப்பட்ட வசதிகள் நமது அங்கன்வாடியில் உள்ள நிலையில் நான் ஏன் தனியார் பள்ளியின் என் குழந்தையை சேர்க்க வேண்டும். நானே அங்கன்வாடிகளில் உள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள மறுத்தால் எப்படி? அதோடு, என் மகள் இங்குள்ள குழந்தைகளுடன் பழகும்போது விரைவில் தமிழ் கற்றுக் கொள்வாள். சமூகத்தின் அனைத்துப் பிரிவு குழந்தைகளையும் என் மகள் இளவயதிலேயே புரிந்துகொள்ள அங்கன்வாடி மையம் உதவும் '' என்றார்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment