மறுசுழற்சி பேப்பரில் தயாராகும் பென்சில்... கோவை திவ்யாவின் புது முயற்சி! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மறுசுழற்சி பேப்பரில் தயாராகும் பென்சில்... கோவை திவ்யாவின் புது முயற்சி!

பூ ப்போட்ட பென்சில், கார்டூன் டிசைன் பென்சில், ரப்பர் வைத்த பென்சில் எனக் குழந்தைகளிடம் எப்போதும் பென்சிலுக்கான கிரேஸ் அதிகம். அந்த வகையில் இயற்கையுடன் இணைந்த பேப்பர் பென்சில்கள், விதையுடன் கூடிய ஆர்கானிக் பென்சில்கள், இயற்கை சாயங்களுடன் கூடிய ஃப்ளேவர்டு பென்சில்கள் என பென்சில் தயாரிப்பில் புதுமையைப் புகுத்தியுள்ள ``சூப்பர் ஹீரோஸ்" நிறுவனத்தின் உரிமையாளரான கோயம்புத்தூரைச் சேர்ந்த திவ்யா புதுமையான பென்சில் தயாரிப்பு பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்கிறார். 







 ``பயன்படுத்திய பேப்பர்களை மறுசுழற்சி செய்து, பென்சில்கள் தயாரிப்பதுதான் எங்களுடைய ஸ்பெஷல். பேப்பரை மறுசுழற்சி செய்து பென்சிலா என ஆரம்பத்தில் சிரித்தவர்கள் கூட இன்று எங்களைப் பாராட்டுகிறார்கள். பொதுவாக பென்சில்களை குழந்தைகளுக்குப் பிடித்த ஒன்றாக மட்டும்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் பென்சில் தயாரிப்பதற்காக உலக அளவில் ஓராண்டுக்கு ஒரு பில்லியன் மரங்கள் வெட்டப்படுகிறது என்பது நம்மில் பலர் அறியாத உண்மை. மரங்கள் அழிப்பைத் தடுக்க எடுத்த இந்த முயற்சிக்கு இன்று மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது'' 




என்றவர் பென்சில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய காரணத்தைப் பகிர்கிறார். ``எங்களுடையது பாரம்பர்யமான விவசாயக் குடும்பம். நான் சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் படிச்சு முடித்து பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். பருவமழை இல்லாத காரணத்தால் விவசாயத்தைச் செழிக்க வைக்கமுடியாமல், எத்தனையோ விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைச் செய்திகளாகப் படிக்கும் போது, அதை எளிதில் கடந்து போயிருக்கிறேன். ஆனால் அதே நிகழ்வு எங்கள் வீட்டில் நடந்தபோதுதான் உண்மை உயிரை உறையவைத்தது. 



தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் எங்களின் தாத்தாவும் ஒருத்தர்" என்று சொல்லி அமைதியானார் திவ்யா. ``தாத்தாவின் மரணத்துக்குப் பின் ஐ.டி வேலையை விடுத்து, விவசாயத்தை என்னுடைய எதிர்காலமாகத் தேர்வுசெய்தேன். விவசாயம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடப் போகிறேன் என வீட்டில் சொன்னதும், தாத்தாவின் மரணத்தால் எல்லோரும் பயந்தார்கள். ஆனால் நான் உறுதியாக இருந்தேன். என் நண்பன் விஷ்ணுவர்தனும் 





ஐ.டி வேலையை விடுத்து, விவசாயிகளுக்காக என்னுடன் கரம் கோத்தார். முதல் கட்டமாக விவசாயிகளின் மரணத்தைத் தடுக்கும் முயற்சியாக, விவசாயிகளையும் வாடிக்கையாளர்களையும் ஒருங்கிணைக்கும்" சூப்பர் ஹீரோஸ்" என்ற ஆன்லைன் பக்கத்தை உருவாக்கினோம். இந்தப் பக்கத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் உருவாக்கும் பொருள்களை சந்தை விலைக்கு நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்க முடியும். இதன் மூலம் அவர்களின் லாபம் அதிகரிக்கும். ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு ஆன்லைன் வணிகத்தைப் புரியவைக்கவே நிறைய சிரமப்பட்டோம். இயற்கையை நம்பி ஏமாந்த விவசாயிகள். மனிதர்களை நம்பவும் தயாராக இல்லை. 





பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு எங்களுடைய புது முயற்சியில் சேர்ந்து செயல்படச் சம்மதித்தார்கள். இரண்டு விவசாயக் குடும்பத்துடன் ஆரம்பித்த எங்களுடைய ஆன்லைன் பக்கத்தில் தற்போது 860 விவசாயக் குடும்பத்தினர் பங்கெடுத்து, இடைத்தரகர்கள் இல்லாத விவசாயத்தை உருவாக்கி உள்ளனர். நாங்கள் இதற்காக எந்தக் கட்டணத்தையும் விவசாயிகளிடம் வசூலிக்காமல், எங்களுக்கான வருமானத்தை விளம்பரதாரர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம். அடுத்தகட்ட முயற்சியாக விவசாய வளர்ச்சியில் ஆர்வம்காட்டத் தொடங்கினோம். 





நம்மையே அறியாமல் என்னென்ன வகையில் நாம் இயற்கையை அழிக்கிறோம் எனப் பட்டியல் போட்ட போதுதான்... பென்சில் தயாரிப்புக்காக, ஒரு வருடத்தில் பில்லியன் கணக்கில் மரங்கள் அழிக்கப்படுகின்றன என்ற தகவல் தெரியவந்தது. இது அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு மாற்று வழியை உருவாக்க நிறைய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டோம். அப்போதுதான் பேப்பரை மறுசுழற்சி செய்து பென்சில் உருவாக்கும் தோன்றியது. பேப்பரின் அடர்த்தியை உறுதியாக்கி பேப்பர் பென்சில்கள் தயார் செய்தோம். பென்சிலுக்கான வெளிப்புற நிறத்துக்குப் பழங்கள், காய்கறிகள், பூக்கள் போன்றவற்றிலிருந்து சாயங்கள் எடுத்து இயற்கையான பென்சில்கள் எனக் குழந்தைகளிடம் கொடுத்து டிரையல் செய்தோம். குழந்தைகள் ரொம்பவே மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்கள். அதன் பின் பென்சிலின் பின்புறம், விதை கேப்சூல்களை வைத்து, பென்சிலை குழந்தைகள் பயன்படுத்தி சிறிதான பிறகு, மண்ணில் நட்டு வைத்தால் செடி முளைக்கும் வகையிலான விதையுடன் கூடிய பென்சில்கள், குழந்தைகளுக்குப் பிடித்த ஃப்ளேவர்களுடன் கூடிய பென்சில்கள் போன்றவற்றை உருவாக்கி சாதாரண பென்சிலின் விலைக்கே இந்த பென்சில்களையும் விற்பனை செய்தோம். அதன் பின் பேப்பர் பேனாக்கள் உருவாக்கத் தொடங்கினோம். மக்களும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நல்ல வரவேற்பு கொடுத்து, 




இயற்கை பாதுகாப்பில் பங்கெடுத்தார்கள். பென்சிலுக்கான விதைகள், சாயங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை நேரடியாகவே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறோம், இப்போது அடுத்தகட்டமாக விதைகளுடன் கூடிய திருமண அழைப்பிதழ்கள், நோட்டுப் புத்தகங்கள் உருவாக்கி வருகிறோம். பெரிய நிறுவனங்களில் ஆர்டர்கள் எடுத்து அவர்களின் தேவைக்குத் தகுந்தாற் போன்று இயற்கை சார்ந்த பொருளை உருவாக்கி. விற்பனை செய்கிறோம். விவசாயத்திற்கும் இயற்கைப் பாதுகாப்புக்கும் எங்களால் முடிந்தவற்றைச் செய்ய முடிகிறது என்ற மனதிருப்தியும் கிடைக்கிறது. மாற்றங்களுடன் அடுத்தகட்ட இயற்கை வளர்ச்சி தொடரும்" என்கிறார்.





🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment