தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் கொள் குறி வகை (அப்ஜக்டிவ் டைப்) போட்டித் தேர்வுகளில், தேர்வு நடைபெற்ற இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளிப்படைத்தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
தொகுதி-Iல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாவட்ட அலுவலர் ஆகிய பதவிகளுக்கான 181 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 3ம் தேதி அன்று நடைபெற்றது.
இவர்களுக்கான முதன்மை தேர்வு ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான உத்தேச விடைகள் வெளியீடு மற்றும் சன்றிதழ் சரிபார்ப்பு குறித்த தகவல்கள் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வில் பங்குபெற்ற தேர்வர்கள் உத்தேச விடைகளின் உதவியோடு தேர்வில் தாங்கள் சரியெனக் கருதி அளித்த விடைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். அதே சமயம் தேர்வர்கள் தேர்வாணையம் வெளியிட்ட உத்தேச விடைகளில், தாங்கள் தவறு எனக் கருதும் விடைகளை ஏழு நாட்களுக்குள் தேர்வாணைய இணையதளத்திலேயே மறுப்புத் தெரிவித்துச் சரியான விடை எதுவெனக் குறிப்பிட்டு அதற்கான உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேர்ந்த வல்லுநர் குழுவினால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளாகவே இருப்பினும், தேர்வர்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கென, தனித்தனியாக ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் மூன்று வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் தவறெனக் குறிப்பிடும் விடைகள் அனைத்தையும் தீவரமாகப் பரிசீலனை செய்து வல்லுநர்களால் குறிப்பிடப்படும் விடைகளைக் கொண்டு மட்டுமே தேர்வு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணி மேற்கொள்ளப்படும்.
சரியான விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
எந்தவொரு வினாவிற்கும், கொடுக்கப்பட்ட விடைகளில் சரியான விடைகள் ஏது இல்லை என்றாலும், கேட்கப்பட்ட கேள்விகளிலேயே குழப்பம் இருந்து சரியான விடைகளைத் தேர்வு செய்ய இயலாது என வல்லுநர் குழு அறிக்கை அளிக்கிறதோ அவ்வகை கேள்விகளுக்கு அனைத்து தேர்வர்களுக்கும் விடையளித்திருந்தாலும், இல்லை என்றாலும் அதற்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இதில் கலந்துகொண்ட 1,68,549 விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அந்த பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட 9,850 விண்ணப்பதார்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் முதனிலை தேர்வு நடைபெற்ற ஒரு மாத காலத்தில் தேர்வாணைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டது போல வருகிற ஜூலை மாதம் 12, 13 மற்றும் 14ம் தேதிகளில் இவர்களுக்கான முதன்மை தேர்வு நடைபெறும்.
முதன்மை தேர்விற்குத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் வருகிற 10/04/2019 முதல் 20/04/2019ம் தேதி வரை தங்களது மூலச் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான குறிப்பானைத் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படுவதோடு, தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமும் தெரிவிக்கப்படும்.

No comments:
Post a Comment
Please Comment