தடை! மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த... பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வு
கோடை விடுமுறையில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.மாணவர்கள் வாங்கும் மதிப்பெண், தேர்ச்சி சதவீதம் தான் அந்த பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன.பெரும்பாலான தனியார் பள்ளிகள், அடுத்த கல்வி ஆண்டிற்கான (தேர்ச்சி பெற்று செல்லும் வகுப்பு) பாடத்தினை கோடை விடுமுறையில் முன்கூட்டியே நடத்தி முடித்து,
மாணவர்களுக்கு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தி, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஏற்பாடு செய்து வந்தனர்.இதுபோன்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பிளஸ் 2 பாடத்தினை பிளஸ் 1 பாடத்திற்கு பதிலாக நடத்தி முடித்துவிட்டு 2ம் ஆண்டு முழுவதும் மாதிரி தேர்வு நடத்தி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வழி வகுத்தனர்.இப்பழக்கம் நாளடைவில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கும் பரவியது. இம்முறையை மாற்றுவதற்காகத்தான் தற்போது பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கிடையே பிளஸ் 1 முடித்த மாணவ மாணவியருக்கு கோடை விடுமுறையில் பிளஸ் 2 பாடத்திட்டத்தினை நடத்தக்கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கக் கூடாது. கோடை விடுமுறையின்போது பல்வேறு சரும நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும், உறவுகளை புதுப்பித்துக்கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதையும் மீறி சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பாடம் நடத்தி வருவதாக மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிக்கு புகார்கள் வந்தன.
அதையொட்டி எந்தெந்த பள்ளிகளில் கோடை விடுமுறையில் பாடம் நடத்தப்படுகிறது என மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பழனிச்சாமி கூறியதாவது:
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்படிப்பான ஐஐடி யில் சேர வைக்கப்படும் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் விருப்பப்பட்டால் மட்டுமே வகுப்பு நடத்தலாம்.ஆனால் அடுத்த ஆண்டு படிக்கக்கூடிய பாடம் கோடை விடுமுறையில் நடத்தக்கூடாது. கடலுார் மாவட்டத்தில் ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டிற்காக வரும் கல்வியாண்டில் 100 சதவீதம் பயோமெட்ரிக் முறை அமைக்கப்படும்.ஆசிரியர்கள் தாமதமாக வர அனுமதி கிடையாது. கடலுார் மாவட்டத்தில் 264 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 6 பள்ளிகள் மட்டுமே அங்கீகாரம் பெறாமல் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தடை! மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த... பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வு

No comments:
Post a Comment
Please Comment