ராணுவ ஆள் சேர்ப்பு பணியில் விரல்ரேகைப் பதிவு: முதல்முறையாக கடலூரில் அறிமுகம்
ராணுவத்துக்கான ஆள் தேர்வு பணியில் விரல்ரேகைப் பதிவு முதல்முறையாக கடலூரில் நடைபெறும் முகாமில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்திய ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம் ஜூன் 7 முதல் 17-ஆம் தேதி வரை கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் வேலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முகாம் நடைபெறவுள்ள விளையாட்டரங்கில் தங்குவதற்கான வசதி, உணவு, கழிப்பறை வசதிகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன், கடலூர் சார்-ஆட்சியர் கே.எம்.சரயூ, கர்ணல் தருண்துவா, மேஜர் பிரஜேஷ், சுபேதார் மேஜர் எஸ்.எம்.பட் உள்ளிட்டோர் புதன்கிழமை மாலை ஆய்வு செய்தனர்.
இந்த முகாமில், புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக ராணுவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 18 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்கள் மாவட்டம் வாரியாக தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். தேர்வில் பங்கேற்பவர்கள் உள்ளே நுழையும் போதே அவர்களது விரல் ரேகை பயோ-மெட்ரிக் மூலம் பதிவு செய்யப்படும். அவர் தேர்ச்சி பெறாதபட்சத்தில் விளையாட்டரங்கை விட்டு வெளியே செல்லும் போதும் அவரது விரல்ரேகை பதிவு செய்யப்படும். இதனால், அடுத்தடுத்த மாவட்டங்களின் தேர்வின் போது ஆள்மாறாட்டத்தைத் தவிர்க்க முடியும்.
இதற்காக, பயோ-மெட்ரிக் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடலூரில் நடைபெறும் இத்தேர்வில் தான் முதல்முறையாக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
முதலில் உடல் திறன் சோதனையும், அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மருத்துவ சோதனையும் நடைபெறும். முதல் நாளில் 4,500 பேர் வரை பங்கேற்க உள்ளனர். ஆனால், மருத்துவப் பரிசோதனை ஒரு நாளைக்கு 320 பேருக்கு மட்டுமே செய்ய முடியும்.
எனவே, கூடுதலாக தேர்வானவர்களுக்கு மற்றொரு நாளில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இதில், தேர்வு பெறுவோருக்கு சென்னையில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
தேர்வுப் பணிகள் அதிகாலை 3 மணிக்கு தொடங்கிவிடும் என்பதால் வியாழக்கிழமை (ஜூன் 6) மாலை முதலே தேர்வர்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு தங்குவதற்கு நகர அரங்கமு, மஞ்சக்குப்பம் மைதானத்திலுள்ள கழிப்பறைகளையும், எளிதில் உணவு கிடைக்கச்செய்வது போன்ற ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment