தமிழகத்திலும் மழை பெய்யும் கேரளாவில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்
கேரளாவில் தென் மேற்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்கும். இந்நிலையில் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. ஆனால், திருத்தணி, திருச்சியில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. கோடை வெயில் காலம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் வெயிலின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதிகபட்சமாக தமிழகத்தில் 114 டிகிரி வரை சென்ற வெயில் தற்போது படிப்படியாக குறைந்துகோண்டே வருகிறது.
அதிக இடங்களில் 108 டிகிரி வரை கொளுத்தி வந்த வெயில், தற்போது ஒருசில இடங்களில் மட்டுமே 106 டிகிரி வெயில் நிலவியது. அதன்படி திருத்தணி, திருச்சியில் 106 டிகிரி வெயில் நிலவியது. பாளையங்கோட்டை 104 டிகிரி, மதுரை, சென்னை 102 டிகிரி வெயில் நிலவியது. வெயிலின் தாக்கம் குறைந்து வரும் அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக இடியுடன்கூடிய மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக ஏற்காடு, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் 70 மிமீ, அவினாசி, திருப்பூர், சூளூர் 60 மிமீ, போச்சம்பள்ளி, ஓமலூர் 50மிமீ, ஈரோடு, வேலூர், பாப்பிரெட்டிப்பட்டி, மேட்டூர், பரூர் 40 மிமீ, திருப்பத்தூர், தர்மபுரி, குமாரபாளையம், உளுந்தூர்பேட்டை, தம்மம்பட்டி, பரமத்திவேலூர், பென்னாகரம், பீளமேடு 30 மிமீ,சிவகாசி, மேலத்தூர், ஹரூர் 20மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர தமிழகத்தின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.
இந்நிலையில், இன்று சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, நாமக்கல், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்றின் வேகம் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். தமிழகத்தில் பரவலாக அனேக இடங்களில் மழை பெய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. மேலும், கேரளாவில் இன்று அல்லது நாளை தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதன் அறிகுறியாக அந்தமான் தீவுப்பகுதியில் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தமிழகத்திலும் மழை பெய்யும் கேரளாவில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

No comments:
Post a Comment
Please Comment