அரசுப் பள்ளிகளில் யோகா, நடனம், பாட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடு: அமைச்சர் தகவல்
தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் யோகா, நடனம், பாட்டுப் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பள்ளிக்கல்வித்துறைக்கு சிறந்த திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
இந்த எண்ணிக்கை வரும் கல்வியாண்டில் 5 லட்சமாக அதிகரிக்கும். தனியார் பள்ளிகள் மீதான மோகம் மாறி, அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளிகள் இசை, நடனம், யோகா போன்றவை மூலம் பெற்றோர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதாகவும் அவையனைத்தும் அரசுப் பள்ளிகளில் வாரத்துக்கு ஒரு நாள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தலில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த 2017-18-இல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 3 மாதங்களில் மடிக்கணினி வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
Please Comment