மீன்பிடி தடைக்காலத்தை அக்டோபருக்கு மாற்றுவோம்: அமைச்சர்
மீன்பிடி தடைக்காலத்தை அக்டோபர் மாதத்துக்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி பேசியது: மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை உள்ளது. இதனை மாற்றி அக்டோபர் 15-இல் இருந்து டிசம்பர் 15 வரை மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
அப்போது அமைச்சர் டி.ஜெயக்குமார் குறுக்கிட்டு கூறியது:
இது நல்ல யோசனை. அரசின் கருத்தும் இதுதான். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களைவிட அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம்தான் நல்லது. ஆனால், மீன்பிடி தடைக்காலத்தை தமிழக அரசு மட்டுமே முடிவு செய்ய முடியாது. இந்தியாவில் உள்ள கடலோர மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து எடுத்த முடிவின் அடிப்படையில் மத்திய அரசு இந்த மீன்பிடி தடைக்காலத்தை அறிவித்துள்ளது.
இயற்கைப் பேரிடர் பிரச்னைகளில் இருந்து மீனவர்கள் தப்புவதற்கும், மீன் வளம் பெருகுவதற்கும் அக்டோபர் மாதமே சிறந்தது. இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்து, கடலோர மாநிலங்களுக்கு இடையேயும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி மீன்பிடி தடைக் காலத்தை மாற்றியமைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments:
Post a Comment
Please Comment