ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை பெற ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேதியை நவம்பர் 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த திட்டத்தின்படி ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகை பெரும் விவசாயிகள் ராபி (குளிர் கால) பருவ விதைப்புக்கு முன்பாக பயன்பெறும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், கிசான் திட்டத்தின் மூலம் 7 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
Please Comment