மாணவர்களின் நலனுக்காக புது முயற்சி கேரள பள்ளிகளில் நீர் அருந்த நேரம் ஒதுக்கீடு
மாணவர்களின் உடல் நலனைக் கருதி கேரள பள்ளிகளில் நீர் அருந்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளும் பதின்ம வயதினரும் ஒரு நாளைக்கு சுமார் 1.5 முதல் 3 லிட்டர் வரை நீர் பருக வேண்டும் எனக் குழந்தைகள் நல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அளவு பாலினம், வயது மற்றும் எடையைப் பொறுத்து சற்றே மாறும். அவ்வாறு பருகாவிடில் லேசான நீர்ச்சத்துக் குறைவால் தலைவலி, எரிச்சல் மற்றும் மயக்கம் போன்றவை உண்டாக வாய்ப்புண்டு.
தொடர்ந்து குறைவான நீரைப் பருகி வந்தால் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளை ஆகியவை பாதிக்கப்படும்.
குழந்தைகள் நல நிபுணரான சச்சிதானந்த காமத், 'எங்களிடம் சிறுநீர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு தினமும் பல குழந்தைகள் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண் குழந்தைகள் ஆவார்கள். அவர்கள் போதுமான அளவு நீர் பருகுவதில்லை எனத் தெரிய வந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் பள்ளிகளில் உள்ள அசுத்தமான கழிப்பறைகளைப் பயன்படுத்த அவர்கள் விரும்பாதது ஆகும்.' எனத் தெரிவித்துள்ளார்.
எனவே இதையொட்டி கேரளாவில் உள்ள பள்ளிகளில் நீர் பருக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கழிப்பறை செல்ல இடைவேளை நேரம் ஒதுக்கி மணி அடிப்பதைப் போல் இதற்கு நீர் மணி எனப் பெயரிட்டு மணி அடிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அனைத்து மாணவர்களும் நீர் பருக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment