வெகுநாட்களுக்கு பிறகு.. ஆபீஸ் போக ரெடியா? (விழிப்புணர்வு பதிவு) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வெகுநாட்களுக்கு பிறகு.. ஆபீஸ் போக ரெடியா? (விழிப்புணர்வு பதிவு)

வெகுநாட்களுக்கு பிறகு.. ஆபீஸ் போக ரெடியா?  (விழிப்புணர்வு பதிவு)

 ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளது. வீட்டிலிருந்தே பணியாற்றும் வசதியும் (ஒர்க் பிரம்ஹோம்) முடிவுக்கு வர உள்ளது. வெகு நாட் களுக்கு பிறகு அலுவலகம் செல்லும்போது சில விஷயங்களை மறந்துவிடுவது வழக்கம். அதேபோல, வெகுநாட்களாக பயன்பாட்டில் இல்லாத பொருட்களை தூசி தட்டி, அலுவலக வாழ்க்கைக்கு பத்திரப்படுத்துவதும் அவசியம். அப்படி சில விஷயங்களை தொகுத்திருக்கிறோம்.

  ஆவணங்களை சரிபாருங்கள்

 அலுவலக அடையாள அட்டை, அலுவலக சம்பந்தமான கோப்புகள், அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ரசீதுகள், வாடிக்கையாளர்களிடம் பெற்ற காசோலை, கணக்கு விவர அறிக்கைகள் போன்றவற்றை பத்திரமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

  வண்டி ‘ஸ்டார்ட்' ஆகிறதா?

 மாதக்கணக்கில் டூ வீலர், 4 வீலர் வாகனங்கள் வீட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், அவை முறையாக ஸ்டார்ட் ஆகிறதா?, ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்பதை முன்கூட்டியே கவனித்து விடுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் வீட்டில், இத்தகைய பிரச்சினைகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் வெகுநாட்களாக ‘ஸ்டார்ட்' செய்யாத வாகனங்களை ஸ்டார்ட் செய்து, அதன் தன்மையை பரிசோதியுங்கள்.

  ஹெல்மெட், காலணிகள்

 ஹெல்மெட் சுத்தமாக இருக்கிறதா என்பதை முன்கூட்டியே சோதிப்பது நல்லது. இல்லையெனில் தூசி படிந்த ஹெல்மெட்டை தலையில் மாட்டியபடி, அழுக்கு தலையோடு அலுவலகம் செல்ல நேரிடும். அதேபோலதான், அலுவலகத்தில் அணிந்து செல்லக்கூடிய காலணிகளும், சாக்ஸ்களும் சுத்தமாக இருக்கிறதா? என்பதை சோதிப்பது நல்லது. வெகுநாட்களாக பயன்படுத்தாத காலணி களுக்குள், விஷ பூச்சிகள் தங்கியிருக்க வாய்ப்புண்டு.

  ஓட்டுநர் உரிமம், வாகன காப்பீடு முக்கியம்

 ஓட்டுநர் உரிமத்தையும், வாகன காப்பீட்டையும் மறந்துவிடாமல் எடுத்து செல்வது நல்லது. அதேசமயம், வாகனத்தின் காப்பீடு காலாவதி ஆகிவிட்டதா என்பதையும் சோதித்து கொள்ளுங்கள்.

  மாஸ்க்- கிருமிநாசினி

 அலுவலகப் பொருட்களுடன் உயிர் காக்கும் பொருட்களான முக கவசம் மற்றும் கிரிமிநாசினி ஆகியவற்றையும் கையோடு எடுத்து செல்லுங்கள்.

  பொது போக்குவரத்து பயனாளரா?

தனி வாகனத்தில் அலுவலகம் செல்பவர்களை விட, நீங்கள்தான் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். கூட்டமான பேருந்துகளையும், கூட்ட நெரிசலான பயண நேரங்களை தவிர்ப்பது நல்லது. முன்கூட்டியே பேருந்து நிலையம் வருவது, நெருக்கடியிலிருந்து விடுபட உதவும். ரெயில் சேவையை பயன்படுத்துபவர்களும், வழக்கமான பயண நேரத்தை கணக்கில் கொள்ளாமல், முன்கூட்டியே ரெயில் நிலையம் வருவது நல்லது. மாதாந்திர ரெயில் பயணச்சீட்டை புதுபிக்காதவர்கள், டிக்கெட் கவுண்டர் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதையும் நினைவு படுத்துகிறோம்.

  வீட்டு சாப்பாடு அவசியம்

 ஊரடங்கு முடிந்தாலும் இயல்பு நிலைக்கு திரும்ப சில காலம் தேவைப்படும் என்பதால், சில நாட்களுக்கு வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டு வருவது நல்லது. உணவகங்களில் பிரியாணி, தள்ளுவண்டி வெரைட்டி சாதம், அக்கம்-பக்கம் ஓட்டல் ‘விசிட்' போன்ற திட்டங்களுக்கு சில நாட்கள் விடுமுறை விடுவது நல்லது.

  வெயில் காலம் பாஸ்

 கோடை வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்துவிட்டதால், அலுவலகம் செல்லும்போது மோர், சீரக தண்ணீர், வெள்ளரி போன்ற கோடைகால உணவுகளையும் கையோடு எடுத்து செல்லுங்கள்.

  சமூக இடைவெளி

நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அலுவலகத்தில் சமூக இடைவெளியுடன் பழகுவது, உங்களையும், உங்களது நட்பையும் வெகுகாலம் உயிர்ப்புடன் வைத்திருக்கும். அதேசமயம் அலுவலகம் செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு ‘லிப்ட்' கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment