வீட்டுக்குள்ளேயே இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு மருந்து - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வீட்டுக்குள்ளேயே இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு மருந்து

வீட்டுக்குள்ளேயே இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு மருந்து 

காலையில் எழுந்து சுறுசுறுப்பாக கிளம்பி, அலுவலகம் புறப்பட்டு சென்று இரவில் வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகம். அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வெளி உலக தொடர்புடன் தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்து பழகியவர்கள், அந்த தொடர்பை துண்டித்துக் கொண்டு பொழுதை கழிப்பதற்கு மிகுந்த சிரமப்படுகிறார்கள். 


நிறைய பேர் வீட்டில் இருந்து வேலையை தொடர்கிறார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சினை இல்லை. ஆனால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள், சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் மன நெருக்கடி, மன கவலைக்கு உள்ளாக வாய்ப்பு அதிகம். இவை அந்த நபருக்கு மன அழுத்தம் ஏற்பட வழிவகுத்துவிடும். 

இதையும் படிக்கவும்
ப்ராண்ட்பேண்ட் பயனர்களுக்கு அதிர்ஷ்டம் தான் ஏப்ரல் 30வரை அன்லிமிட்டட் வழங்கும் நிறுவனங்கள்
அதோடு அவர்களின் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கொரோனா வைரஸ் பற்றிய பீதியும் சிலருக்கு ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் போன்றவை, மாற்றங்களுக்கு உட்பட்டு இருப்பதால் அதனை பின்பற்ற மனதளவில் தயாராகிக்கொள்ள வேண்டும். 


 நோய் பாதிப்பு குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சாதாரண இருமலோ, தும்மலோ இருந்தால் பீதி அடையாதீர்கள். அது தேவையற்ற மன அழுத்தத்திற்கு வித்திடும். இருமல் தொடர்ந்து கொண்டிருந்தால் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை பெறுங்கள். கொரோனா அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தால் உடனே உங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள். மனதுக்குள்ளேயே சந்தேகத்தை வலுப்படுத்துவது மன அழுத்தத்தை அதிகப்படுத்தவே செய்யும்.

 நோய் பாதிப்பு குறித்து வெளியாகும் எல்லா தகவல்களையும் படித்து மனதை குழப்பிக்கொள்ளாதீர்கள். அவை உண்மை தன்மையுடையதுதானா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். சமூகவலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளில் பெரும்பாலானவை பொய் செய்தியாகவும், பீதியை ஏற்படுத்தும் விதமாகவும் இருப்பதால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள், உலக சுகாதார நிறுவன இணையதளத்தில் வெளியாகும் தகவல்களை படியுங்கள். 

 காலை, மாலை இரு வேளையோ அல்லது ஒரு வேளையாவது பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். அது நரம்புகள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அமைதிப்படுத்தி மன வலிமையை அதிகரிக்கச் செய்யும். குடும்பத்தினருடன் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுங்கள். மின்னணு சாதனங்கள், சமூகவலைத்தளங்கள் போன்ற தொழில்நுட்பங்களை அதிகமாக சார்ந்திருப்பதன் மூலம் நிறைய பேர் உணர்வு ரீதியாக குடும்பத்தினரிடமிருந்து விலகி தனிமைப்படுத்தப்படுகிறார்கள். 

அத்தகைய தனிமையை தகர்த்தெறியும் வாய்ப்பாக இந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். குடும்பத்தினர் அனைவரிடமும் மனம் விட்டு பேசுங்கள். அது தனிமையில் இருக்கும் எண்ணத்தை ஏற்படுத்தாது. மன அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காது. 

 யோகா, தியானம் உள்ளிட்ட சில ஆழமான சுவாச பயிற்சிகள், மனதை அமைதி யாக வைத்திருப்பதற்கு உதவும். அதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும், ஒழுங்குபடுத்துவதும், புதிய அலங்கார வேலைப்பாடுகளை மேற்கொள்வதும் மனதை இலகுவாக்கும். 

வீட்டில் புதிய சூழலை உணரவைக்கும். வீட்டின் உள்புறத்திலேயே எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய பழகுங்கள். அதுவும் மனநிலையை மேம்படுத்த உதவும். சமூகவலைத்தளங்கள் வழியாகவோ, வீடியோ கால் வழியாகவோ நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். அது தனிமையில் இருக்கும் எண்ணத்தை ஏற்படுத்தாது. 


 ‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’, ‘எனக்கு எதுவும் நடக்காது’ போன்ற நம்பிக்கையான வார்த்தைகளை உபயோகியுங்கள். அதற்கேற்ப முன்னெச்சரிக்கை விஷயத்திலும் விழிப்புடன் இருங்கள். நண்பர்களுக்கு தகவல்களை அனுப்புவதற்கு முன்பு அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். 

பீதியை உருவாக்கும் தகவல்கள் எதையும் அனுப்பாதீர்கள். ஏற்கனவே வாழ்க்கையில் எதிர்கொண்ட மோசமான சூழலை மீண்டும் நினைத்து பார்த்து கவலை கொள்ளாதீர்கள். அது மனதை வெகுவாக பாதிக்கவைத்துவிடும்.

No comments:

Post a Comment

Please Comment