இட மாறுதல் கவுன்சிலிங் ஆசிரியர்கள் கோரிக்கை
இட மாறுதல் கவுன்சிலிங் ஆசிரியர்கள் கோரிக்கை
சென்னை : 'இடமாறுதல் கவுன்சிலிங்கை, உடனே நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும், ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங், கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடக்கும்.
அதற்கான வழிமுறைகள், ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகும். இந்த ஆண்டு, பள்ளிகள் திறப்பு தள்ளிப் போயிருப்பதால், இன்னும் கவுன்சிலிங் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இட மாறுதல் கவுன்சிலிங்கை நடத்தக் கோரி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர், ஆரோக்கியதாஸ், பள்ளி கல்வி துறைக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தமிழக அரசு வெளியிட்ட செலவினங்களுக்கான கட்டுப்பாடுகளில், பொது மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, கூறப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி துறையை பொறுத்தவரை, ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
கவுன்சிலிங்கில் மாறுதல் பெறும் ஆசிரியர்களுக்கு, எந்த செலவினமும், பயணப்படியும், அரசால் வழங்கப்படுவது இல்லை. எனவே, அரசு வெளியிட்ட செலவினங்களுக்கான கட்டுப்பாடு அரசாணையால், பள்ளி கல்வித்துறை இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்துவதில், எந்த பிரச்னையும் இருக்காது. தமிழக அரசுக்கு, எந்த நிதி இழப்பும் ஏற்படாது.
எனவே, கவுன்சிலிங் வழியாக, ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியிடங்களுக்கு நேரடி நியமனம் வழியாக, புதிய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
Please Comment