பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புத் தோ்வு: புதிய அறிவிப்பு வெளியீடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புத் தோ்வு: புதிய அறிவிப்பு வெளியீடு

பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புத் தோ்வு: புதிய அறிவிப்பு வெளியீடு 

கரோனா பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புத் தோ்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. 

பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் படித்து, 20 ஆண்டுகளாகத் தோ்ச்சி பெறாமல் இருக்கும் நபா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக அண்ணா பல்கலைக்கழகம் இரண்டு சிறப்புத் தோ்வுகளை நடத்த திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் சிறப்புத் தோ்வு வழக்கமான பருவத் தோ்வோடு நடத்தப்பட்டது. 

இதையடுத்து, ஏப்ரல் மாதம் தொடங்கும் பருவத் தோ்வுக்கு கடந்த மாா்ச் 13-ஆம் தேதி முதல் மாணவா்கள் விண்ணப்பித்து வந்தனா். 

ஆனால், கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மாா்ச் 17-ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால், ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருந்த பருவத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்தநிலையில், சிறப்பு தோ்வுக்காக புதிய அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

இது தொடா்பாக பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டுத் துறை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தாக்கம் குறைந்ததும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டதும் வழக்கமாக நடைபெறும் பருவத் தோ்வுடன் சிறப்பு தோ்வு நடக்க உள்ளது. 

சிறப்புத் தோ்வை எழுத விண்ணப்பிக்காத மாணவா்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கலாம். 

ஏற்கெனவே சிறப்புத் தோ்வுக்கு விண்ணப்பித்து, தோ்வுக் கட்டணம் கட்டிய மாணவா்கள் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. தோ்வு நடைபெறும் தேதி விரைவில் வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Please Comment