அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட 2 லட்சம் மாணவர்கள் கூடுதல் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் 23 அரசுப் பள்ளிகள் உட்பட ஈரோடு மாவட்டத்தில் 31 அரசுப் பள்ளிகளில், கோவை பன்னாட்டு விமான நிலையம் சார்பில், ரூ.28 லட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்படுகின்றன.
இதன் தொடக்க விழா, கோபிஅருகில் உள்ள கெட்டிச் செவியூர் அரசுப் பள்ளியில் நடந்தது.
விழாவில், ஸ்மார்ட் வகுப்பறையைத் தொடங்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3,500 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட்வகுப்பறைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது அது 7 ஆயிரம் பள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் 2 சீருடைகள் வழங்கப்படும்.
அடுத்த 2 சீருடைகள் ஜூலை மாதத்துக்குள் வழங்கப்படும்.
கல்விக்காக தனிசேனல் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் உள்ள 850 பள்ளிகளில் நவீன அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு100 மாணவர்கள் கனடா நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதாக ஆங்கிலத்தை கற்றுக் கொள்வதற்காக 2 ஆயிரம் வார்த்தைகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளனஎன்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: 2013 மற்றும் 2014-ம் ஆண்டுவெயிட்டேஜ் முறையால் பணிவாய்ப்பை இழந்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என 82 ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் பணிவாய்ப்பு வழங்கும் நிலையில் அரசு இல்லை.
தற்போது அரசுப் பள்ளிகளில் 7,500 ஆசிரியர்கள் கூடுதாக உள்ளனர். அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இந்த ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதைப்போன்று ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கையை பொருத்து மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்றார்.
விழாவில், கோவை பன்னாட்டு விமான நிலையத்தின் திட்ட இயக்குநர் ஆர்.மகாலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, கோபி கல்வி மாவட்ட அதிகாரி சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட 2 லட்சம் மாணவர்கள் கூடுதல் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

No comments:
Post a Comment
Please Comment