வரிக் குதிரைகளுக்கு கோடுகள் எதற்கு?
வரிக் குதிரைகளுக்கு கோடுகள் எதற்கு?இயற்கையின் விநோத மான வரிக் குதிரைக்கு, கறுப்பு வெள்ளை பட்டைகள் ஏன் என்ற கேள்விக்கு வெவ்வேறு விளக்கங்களை உயிரியலாளர்கள் கொடுத்துள்ளனர்.அண்மையில், ஆப்ரிக்காவிலுள்ள கென்யாவில், வனப் பகுதியில் கள ஆய்வுகள் செய்யும் ஆலிசன்காப் மற்றும் ஸ்டீபன் காப் ஆகிய இருவரும் புதிய காரணத்தை முன்வைத்து உள்ளனர்.வெப்பப் பகுதியில் வாழும் வரிக்குதிரைகள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு, கறுப்பு வெள்ளைக் கோடுகள், மூன்று வகைகளில் உதவுகின்றன.
கறுப்பு வெள்ளைக் கோடுகள் இருப்பது, அவற்றின் தோலுக்கு அருகே மிக மெல்லிய காற்று அசைவை உருவாக்குகின்றன. இது வெப்பத்தை சிறிது தணிக்கிறது.அடுத்து, வரிக் குதிரைகள், தங்கள் தோலில் கறுப்புப் பட்டை உள்ள பகுதி யில் மட்டும் முடியை சிலிர்ப்பது போல அவ்வப் போது துாக்குகின்றன.வெள்ளை முடிப் பகுதியை அவை அசைப்ப தில்லை. இதுவும் உடல் வெப்பத்தை சிறிதளவு வெளியேற்ற உதவுகிறது.மூன்றாவதாக, தோலில் சுரக்கும் வியர்வை, முடிகளின் நுனிக்கு வந்து ஆவியாவதால், சிறிதளவு உடல் வெப்பம் தணிகிறது என, ஆய்வாளர்கள் இருவரும் 'ஜர்னல் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி' இதழில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன் வேட்டை யாட வரும் விலங்குகளிடமிருந்து தப்பி ஓடும்போது, பார்வைக் குழப்பத்தை ஏற்படுத்த கறுப்பு-வெள்ளை வரிகள் உதவுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். சிலரோ, மேய்ச்சல் நிலத்தில், சக விலங்குகளை அடையாளம் காண இந்தக் கோடுகள் உதவுவதாக தெரிவித்தனர்.இன்னும் சிலரோ, கறுப்பு வெள்ளை கோடுகள் இருந்தால், ஈக்கள் மொய்ப்பதிலிருந்து தப்பிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர். ஆனால், உடலை குளிர்ச்சியாக வைப்பதுதான், மிகச் சரியான காரணம் போலத் தெரிகிறது.

No comments:
Post a Comment
Please Comment