தினம் ஒரு தகவல் வரலாற்றில் இடம்பெற்ற வாகன நெரிசல்
வாகன நெரிசலால் எப்படி எரிபொருள் இழப்பு ஏற்படுகிறது என்பதை வெகு எளிதாக புரிந்து கொள்ளலாம். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77 என வைத்துக் கொள்வோம்.
உங்கள் கார் லிட்டருக்கு 15 கி.மீ. தூரம் ஓடும் என்றால் நீங்கள் தினசரி 20 கி.மீ. பயணிப்பதாக இருந்தால் பெட்ரோலுக்கு செலவிடும் தொகை ரூ.102 ஆக இருக்கும். வாகன நெரிசலின்போது கார் கூடுதலாக 20 சதவீத பெட்ரோலை உறிஞ்சும். இதனால் 20 கி.மீ. தூரத்தை கடக்க நீங்கள் செலவிட வேண்டிய தொகை ரூ.124 ஆக உயரும்.
வாரத்துக்கு 6 நாள் நீங்கள் காரை பயன்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் மாதத்துக்கு ரூ.616 கூடுதலாக செலவிடுகிறீர்கள். ஆண்டுக்கு பெட்ரோலுக்கு நீங்கள் கூடுதலாக செலவிடும் தொகை ரூ.7,400 இருக்கும்.
சீன தலைநகர் பீஜிங்கில் ஏற்பட்ட வாகன நெரிசல்தான் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக 100 கி.மீ. நீளத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது சரியாக 10 நாள் ஆனது. வாகன நெரிசலுக்கு முக்கிய காரணம், பெருகிவரும் வாகனத்துக்கு ஏற்ப சாலைகளை விரிவுபடுத்தவில்லை என்பதுதான்.
டெல்லியில் மட்டுமே 96 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பையில் இது 25 லட்சமாக உள்ளது. ஆனால் சென்னையில் 44 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இணையதளம் குறிப்பிடுகிறது.
பெருநகரங்களில் வாழ்வோரின் வாழ்க்கை தரம் உயர்ந்துவருவதால் அனைவருமே தங்களுக்கென்று ஒரு காரை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
சாலையில் ஒரு பஸ் பயனாளி எடுத்துக்கொள்ளும் இடத்தைபோல 30 மடங்கு அதிக இடத்தை ஒரு கார் உபயோகிப்பாளர் ஆக்கிரமிக்கிறார். இதுவும் வாகன நெரிசலுக்கு முக்கிய காரணமாகும். வாகன நெரிசலில் இந்தியாவில் பெங்களூரு முதல் இடத்திலும் மும்பை இரண்டாமிடத்திலும் உள்ளன.
புனே, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாகத்தான் சென்னை உள்ளது. ஓரளவு வாகன நெரிசல் குறைந்த நகராக அகமதாபாத் உள்ளது. வாகன நெரிசலை குறைக்க, மக்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அல்லது வாகன பெருக்கத்துக்கு ஏற்ப புதிய மேம்பாலங்கள், சுரங்கங்கள், விரிவான சாலைகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

No comments:
Post a Comment
Please Comment